வங்கக் கடலில் புயல் சின்னம்-கன மழை பெய்யும்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம்- புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மத்திய மேற்கு வங்க கடலை நோக்கி நகர்ந்ததால் மழை குறைந்தது. இந் நிலையில் வங்க கடலில் புதிதாக இன்னொரு புயல் சின்னம் உருவாகியுள்ளது.
அந்தமானின் தெற்கு கடல் பகுதியில் இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது தற்போது தமிழ்நாட்டில் இருந்து 1,400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது மெதுவாக வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
அது மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் என்று தெரிகிறது. காரணமாக தமிழகம்- புதுவையில் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்.
இந்தப் புயல் சென்னை-மசூலிபட்டினம் இடையே அடுத்த 2 நாட்களில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1ம் எண் கொடி ஏற்றப்பட்டுள்ளது.