நவ. 8ல் 11 தமிழக மீனவர்களை விடுவிக்கும் இலங்கை
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 11 தமிழக மீனவர்களை இலங்கை அரசு வரும் 8ம் தேதி விடுவிக்கவுள்ளது.
அத்துமீறி இலங்கைக் கடல் பகுதியில் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
அவர்கள் அனைவரும் வரும் 8ம் தேதி அன்று விடுவிக்கப்படவுள்ளனர். இது குறித்து மண்டபம் கடற்படை தலைமை அதிகாரி டி. எஸ். சைனி கூறுகையில்,
நவம்பர் 8ம் தேதி மீனவர்கள் இந்திய கடற்படையிடம் நடுக்கடலில் ஒப்படைக்கப்படுவார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள நெடுந்தீவு இராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
மண்டபம், தங்கச்சிமடம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களை கடந்த 3-ம் தேதி நெடுந்தீவுக்கு அருகில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டனர் என்றார்.