நெல்லையில் கள்ளநோட்டு அச்சடித்த கேரள தம்பதி கைது: கள்ளநோட்டுகள் பறிமுதல்
நெல்லை: நெல்லையில் 500 ரூபாய் கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட கேரள தம்பதி கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரபிக். இவரது மனைவி அஸ்வதி. முதல் கணவரை பிரிந்த அஸ்வதி தற்போது அப்துல் ரபிக்குடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இருவரும் அபிசேகபட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 4ம் தேதி இரவு நெல்லை ஜங்ஷனில் உள்ள பட்டாசுக் கடைகளில் அப்துல் ரபிக், ரூ. 500 நோட்டுக்களை கொடுத்து நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கியபடி இருந்தார். ஒரே கடையில் மீண்டும் மீண்டும் 500 ரூபாய் நோட்டை கொடுத்து 100 ரூபாய்க்கு மட்டும் பட்டாசு வாங்கியதால் கடைக்காரருக்கு சந்தேகம் வந்தது. அவரை பிடிக்க முயற்சிக்கவே அவர் தப்பி ஓடினார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அபிசேகபட்டியில் உள்ள வீட்டில் சோதனையிட்டபோது ஒரு ஸ்கேனர் கருவி, ஒரு பிரிண்டர் முதலியவைகளை பயன்படுத்தி 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வந்தது தெரிய வந்தது.நோட்டின் நீர் எழுத்திலான காந்திபடத்தை மட்டும் ஸ்கிரீன் பிரிண்டிங் முறையில் அச்சிட்டுள்ளார்.
முழுமையாக அச்சடிக்கப்பட்ட 27 நோட்டுகளையும், பகுதியாக அச்சடிக்கப்பட்டிருந்த 78 நோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். அந்த தம்பதி கடந்த 3 மாதங்களாக கள்ளநோட்டு தயாரிப்பில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.