அமைச்சர் சுரேஷ் ராஜன் உருக்கு ஆலை, வீட்டில் கலால்துறை அதிகாரிகள் ரெய்டு
நாகர்கோவில்: தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜனுக்குச் சொந்தமான உருக்கு ஆலை, அலுவலகம் மற்றும் அமைச்சரின் வீடு ஆகியவற்றில் நேற்று முழுவதும் மத்திய கலால்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், பழவூரில் என்.எஸ்.ஆர். ஸ்டீல் பிளான்ட் என்ற உருக்கு ஆலை இயங்கி வருகிறது. இங்கு பழைய இரும்புப் பொருள்களை உருக்கி முறுக்குக் கம்பிகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலை தமிழக அமைச்சர் சுரேஷ் ராஜனுக்குச் சொந்தமானது.
இங்கு தயாராகும் முறுக்குக் கம்பிகளுக்கு உரிய கலால் வரி முறையாக செலுத்தப்படவில்லை என்றும், வரி ஏய்ப்பு நடைபெறுவதாகவும் புகார்கள் வந்தன.
இதையடுத்து, திருநெல்வேலியிலுள்ள மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை அலுவலகத்திலிருந்து கலால் துறை பிரிவைச் சேர்ந்த கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான 7 அதிகாரிகள் குழுவினர் செவ்வாய்க்கிழமை அந்த உருக்கு ஆலை மற்றும் அதன் நிர்வாக அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
என்.எஸ்.ஆர். உருக்கு ஆலையின் நிர்வாக அலுவலகம் நாகர்கோவில் வெள்ளாளர் காலனியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. பின்னர், பழவூரில் உள்ள உருக்கு ஆலையில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை மாலை 5.45 மணிவரை நீடித்தது. பழவூர் ஆலை மற்றும் நாகர்கோவில் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
இதேபோல நாகர்கோவில் அருகே உள்ள ராமவர்மபுரத்தில் அமைச்சர் சுரேஷ் ராஜனின் வீடு உள்ளது. அங்கும் நேற்றுகாலை முதல் பிற்பகல் வரை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இங்கு இரண்டு அட்டைப் பெட்டிகள் நிறைய ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications