போர்க்குற்ற விசாரணை கோரும் அல்சஜீரா-இலங்கைக்கு நெருக்கடி
கொழும்பு: இலங்கை அரசின் போர்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்பது தொடர்பான நிகழ்ச்சிகளை சர்வதேச தொலைக்காட்சியான அல்ஜசீரா தொடர்ந்து ஒலிபரப்பி வருகிறது. இதனால் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களை அந்நாட்டு அரசு ஈவு இரக்கம் இனறி படு கொலை செய்துள்ளதாகவும், மேலும் போர் குற்றத்தில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்படுகின்றது.
இதனையடுத்து, ஐ.நா. சபையும் போர் குற்றம் குறித்த ஆதராங்களை கேட்டுள்ளது.
இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து குளோபல் தமிழ் ஃபோரமும், ஆஸ்திரேலியாவில் இருந்து ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அமைப்பினரும், மற்றும் கனடாவில் இருந்தும் பலர் போர்க்குற்றம் தொடர்பாகவும், இன அழிப்புத் தொடர்பாகவும் விசாரணை தேவை என வலியுறுத்தி வருகின்றனர்.
குளோபல் தமிழ் ஃபோரம் அமைப்பின் தலைவர் இமானுவேல் அடிகளார் இது குறித்த முக்கிய தகவல்களையும், புகைப்படங்களையும் வழங்கியுள்ளார்.
சர்வதேச மன்னிப்பு சபையின் அதிகாரி ஒருவரும் இச்சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார்.
அல்ஜசீரா தனது ஒவ்வொரு மணிநேரச் செய்தியிலும் இது தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவதால் இலங்கை அரசு மேலும் சங்கடத்தில் தள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கை அமைச்சர் ஒருவரை அல்ஜசீரா தொலைக்காட்சி நிர்வாகம் தொடர்பு கொண்டபோது அவர் அக் குற்றச்சாட்டுக்களை மறுத்ததோடு, வெளியான அனைத்துப் புகைப்படங்களும் பொய்யானவை எனக் கூறியுள்ளார்.