ரேஷன் கடைகளில் இந்த ஆண்டும் பொங்கல் பொருட்கள் இலவசம்: கருணாநிதி

சட்டசபையில் இன்று 110வது விதியின் கீழ் முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதன் விவரம்:
தமிழ் புத்தாண்டு தினமான தை திங்கள் முதல் நாள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சர்க்கரை பொங்கல் இட்டு புத்தாண்டு திருநாளை மகிழ்வோடு கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த 2009ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பரிசாக பச்சரிசி அரை கிலோ, வெல்லம் அரை கிலோ, பாசி பருப்பு 100 கிராம், முந்திரி பருப்பு 10 கிராம், உலர்ந்த திராட்சை 5 கிராம், ஏலம் 5 கிராம் ஆகிய பொருட்கள் அடங்கிய பை ஒன்று வழங்க ஆணையிடப்பட்டது.
ஏறத்தாழ ரூ.70 கோடி செலவில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இது இலவசமாக வழங்கப்பட்டது.
அதேபோல வரும் 15.1.2011 தை திங்கள் முதல் நாள் கொண்டாடப்படவிருக்கும் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாளை தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடைகள் மூலமாக 1.1.2011 முதல் தமிழ் புத்தாண்டு பரிசாக சர்க்கரை பொங்கலுக்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சி.ஐ.டி.யூ. செளந்தரராஜனுக்கு கைவிலங்கு போடவில்லை:
முன்னதாக சட்டசபையில் இன்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன் கூறுகையில்,
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் இந்திய நாட்டு தொழிற்சட்டங்களை மதிக்க வேண்டும். நிர்வாகம் நிலைக்கக்கூடிய தொழிற்சங்கம்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது சரியல்ல. பாக்ஸ்கான் தொழிற்சங்க மறியல் போராட்டத்தின்போது சி.ஐ.டி.யூ. செளந்தரராஜன் கைதானபோது கைவிலங்கிடப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றார்.
அப்போது அமைச்சர் அன்பரசன் குறுக்கிட்டு, பாக்ஸ்கான் மறியலில் 319 பேர் கைது செய்யப்பட்டனர். 12 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் செளந்தரராஜனுக்கு கைவிலங்கு போடப்பட்டதாக கூறுவது தவறு. கைவிலங்கு போடப்படவில்லை. தொழிற்சங்க அங்கீகாரம் குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழங்கும் அறிக் கையை வைத்து அரசு நல்ல முடிவு எடுக்கும் என்றார்.
ஆனாலும் மகேந்திரன் மீண்டும் பேசுகையில் செளந்தரராஜனுக்கு கைவிலங்கு போடப்பட்டது என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி கூறுகையில், உறுப்பினர் மகேந்திரன் தொழிற்சங்கத்திற்காக வாதாடுவது தொழிலாளர்களுக்காக பரிந்து பேசுவதில் எனக்கு எந்தவிதமான கருத்து மாறுபாடும் இல்லை.
தொழிலாளர்களுடைய வாழ்வுதான், நாட்டின் நல்வாழ்வு என்பதை எங்களுக்கெல்லாம் உணர்த்தியவர் எங்கள் தலைவர் பேரறிஞர் அண்ணா.
ஆகவே தொழிலாளர்களை பற்றி புதிதாக எங்களுக்கு யாரும் வகுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்தப் போராட்டத்தில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதாக சொல்லப்பட்ட செய்தியை கேள்விப்பட்டதும் நானே பதைத்துப் போய் அதைப்பற்றி விசாரித்தபோது அப்படி நிச்சயமாக அந்த தலைவருக்கு கைவிலங்கு போடப்படவில்லை என்பதை என்னிடத்திலே நிரூபித்திருக்கிறார்கள்.
தொழிற்சங்க தலைவர்கள் என்னை சந்தித்தபோது அவர்களிடத்திலே நானும் அதைப்பற்றி விளக்கியிருக்கிறேன். அவர்களும் அதை மறுத்து பேசாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
ஒன்றை உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொழிற்சங்கப் போராட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் அல்லது இந்த அரசு அல்லது எங்களுடைய தோழமை கட்சியினர் யாரும் வெறுப்பவர்கள் அல்ல. அதை ஏற்க முடியாது என்று சொல்பவர்கள் அல்ல.
ஆனால் போராட்டத்திலேயே 40க்கும் மேற்பட்ட கார்கள் அங்கே உடைக்கப்பட்டிருக்கின்றன, நொறுக்கப்பட்டிருக்கின்றன என்ற இந்த செய்தியையும் இணைத்து அதுதான் போராட்டம் என்று சொன்னால் அதை நாட்டில் அமைதியை விரும்புகிறவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றார்.











Click it and Unblock the Notifications