ருசிகா பாலியல் பலாத்கார வழக்கு-மாஜி டிஜிபி ரத்தோருக்கு ஜாமீன்

ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.செளஹான் அடஹ்கிய பெஞ்ச், ரத்தோர், சண்டிகர் தலைமை நீதித்துறை நடுவரின் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.
ருச்சிகா குடும்பத்தினர், ரத்தோர் மீது கூறிய புகார்களின் அடிப்படையில் அவர் மீது சிபிஐ புதிதாக 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதில் 2 வழக்குகளைப் பரிசீலித்த பின்னர் இந்த ஜாமீன் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலும் ரத்தோருக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறைத் தண்டனையில் அவர் 6 மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளதாலும் ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மோசடி செய்தது (இதுகுறித்து ருச்சிகாவின் தந்தை புகார் கொடுத்துள்ளார்), சித்திரவதை செய்தது, 14 வயது சிறுமியாக இருந்த ருச்சிகாவை தற்கொலைக்குத் தூண்டியது (இரண்டும் சகோதரர் அஷு கொடுத்த புகார்கள்) ஆகிய புதிய வழக்குகள் தற்போது ரத்தோர் மீது சுமத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இரண்டு வழக்குகளில் சிபிஐ சிறப்பு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து விட்டது. தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ரத்தோருக்கு வெறும் 6 மாத சிறைத் தண்டனை விதித்து சண்டிகர் கோர்ட் உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரத்தோர் மீது புதிய வழக்குகளைப் பதிவு செய்தது சிபிஐ என்பது நினைவிருக்கலாம்.
மேலும் சண்டிகர் சிபிஐ கோர்ட் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் கோர்ட்டிலும் சிபிஐ அப்பீல் செய்தது. அதை விசாரித்த செஷன்ஸ் கோர்ட் ரத்தோருக்கான தண்டனையை 18 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டது.
இளம் டென்னிஸ் வீராங்கனையான ருச்சிகா, 1990ம் ஆண்டு ரத்தோரால் பாலியல் பலாத்கார சித்திரவதைக்கு உள்ளானார். அந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி ருச்சிகாவை பலவந்தப்படுத்தி கற்பழித்தார் ரத்தோர். பின்னர் 3 ஆண்டுகள் கழித்து ருச்சிகா தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications