கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கிலிருந்து 3 அதிகாரிகளை விடுவித்தது செல்லும்-உச்ச நீதிமன்றம்
டெல்லி: கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில் இருந்து 3 அதிகாரிகளை உயர் நீதிமன்றம் விடுவித்தது செல்லும் என்று உச்ச நீதமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு நடந்த கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில் அப்போதைய கும்பகோணம் தாசில்தார் பரமசிவம், தஞ்சை மாவட்ட பள்ளிக் கல்வி முதன்மை அதிகாரி பழனிச்சாமி, ஆரம்பக் கல்வித்துறை அதிகாரி கண்ணன் ஆகிய 3 பேரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து அம்மூவரும் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். பின்னர் அவர்கள் மூவரையும் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தீவிபத்தில் தனது 2 பிள்ளைகளையும் பறிகொடுத்த இன்பராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் மூறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது இன்பராஜின் வழக்கறிஞர் ஆஜராகி பள்ளி தீவிபத்திற்கு இந்த 3 அதிகாரிகளும் தான் காரணம் என்பதால் அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த விபத்து பற்றி விசாரிக்க அமைத்த நீதிபதி சம்பத் கம்ஷன் அவர்களுக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று தெரிவித்தது. இதயைடுத்து தான் உயர் நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. எனவே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று அவர்கள் தீர்ப்பளித்தனர்.