மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக ரூ.13 லட்சம் மோசடி: 2 டாக்டர்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு
நெல்லை: பாளையங்கோட்டையைச் சேர்ந்த பெண் டாக்டர் மகனுக்கு மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த 2 டாக்டர்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த பிரபல பெண் டாக்டர் ஆக்னஸ். இவர் தனது மகனுக்கு சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி. மருத்துவ படிப்பு படிக்க சீட் வாங்கித்தரும்படி பாளையைச் சேர்ந்த டாக்டர் அசீம், அவரது தந்தை அல் அமீன் மற்றும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி டாக்டர் மோகன் ஆகியோரிடம் ரூ.13 லட்சம் கொடுத்தார். ஆனால் அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு மெடிக்கல் சீட் வாங்கித் தராமல் ஏமாற்றி விட்டனர்.
இதனையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டாக்டர் ஆக்னஸ் நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார்.
நீதிபதி ராஜேந்திர கண்ணன் உத்தரவின் பேரில் மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சேவியர், இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் விசாரணை நடத்தி டாக்டர்கள் அசீம், மோகன் மற்றும் அல் அமீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.