காங்கிரஸுக்கு திடீர் ஆதரவு-ஜெ. போக்கை பொறுத்திருந்து பார்ப்போம்-சிபிஎம்
சென்னை: மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போக்கை பொறுத்திருந்து பார்க்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறுகையில்,
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழலாகும்.
1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரே அறிக்கை அளித்த பிறகும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, அமைச்சர் ஆ. ராசா தானாக பதவி விலக வேண்டும்; இல்லையெனில் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.
இதற்கிடையே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர தயார் என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி இப்போது எந்த கருத்தையும் கூற மார்க்சிஸ்ட் கட்சி விரும்பவில்லை.
அடுத்தகட்ட அரசியல் வளர்ச்சிப் போக்கை ஆராய்ந்து மார்க்சிஸ்ட் கட்சி உரிய முடிவுகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.
ஒருவேளை ஜெயலலிதா ஆதரவை காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகள் தனியாக பிரிந்து போய் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூடி புதுக் கூட்டணி அமைக்குமா அல்லது நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் உள்ளோம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அல்ல என்று கூறி சமரசம் செய்து கொண்டு அங்கேயே தங்கி விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications