தமிழர் சாதிகளை மோதவிட்டு பார்ப்பது தான் திராவிட அரசியல்: அரிமாவளவன்
கோவில்பட்டி: தமிழகத்தில் உள்ள சாதிகளை ஒன்றோடு ஒன்று மோத விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் திராவிட அரசியல் என்று தமிழர் களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் சாடியுள்ளார்.
மள்ளர் மீட்பு களத்தின் கொள்கை விளக்க புத்தக வெளியீட்டுவிழா கோவில்பட்டியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழர் களத்தின் மாநில பொதுச் செயலாளர் அரிமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது,
நமது தமிழ் சாதிகள் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிட வழிவகை செய்து வருவது தான் திராவிட அரசியல். இந்த கொடுமை காலம் காலமாக நடந்து வருகிறது.
அதனால் தான் தமிழர்களை வெறும் இட ஒதுக்கீட்டிற்காக திருவோடு ஏந்தி அலையும்படி செய்துவிட்டனர். களப் போராட்டம் என்பது வெறும் இட ஒதுக்கீட்டை மட்டும் பெறுவதற்கு அல்ல. தமிழர்கள் இழந்த மன்னுரிமையை மீட்கவும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவும் வழி வகை செய்ய வேண்டும்.
நமது உட்சாதி சண்டைகளை தீராப் பகையாகக் கருதாமல் வெறும் குடும்ப சண்டையாக கருதி அதை தீர்க்க முயலுவோம். அதுவே பெரிய பிரிவினையாக வளரவிடாமல் தடுப்போம்.
நமது பொதுவான பிரச்சினைகளைத் தீர்க்க களம் அமைத்துவிட்டதால் செந்தில் மள்ளரும், அரிமாவளவனும் மட்டுமே போதும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என எண்ண வேண்டாம்.
ஒவ்வொரு தமிழரும் திராவிடத்திற்கு எதிராக கருத்துகளை உள்வாங்கி அதனால் நாம் இழந்ததைப் பற்றியும், இனி என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பற்றியும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
லச்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று அழித்தது மட்டுமில்லாமல், தமிழக மீனவர்களையும் பலிகொடுக்க வைத்தது சோனியாவின் காங்கிரஸ் அரசு.
வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும், அதன் கூட்டணி கட்சியையும் தமிழகத்தில் இருந்து வேரோடு அகற்ற ஒவ்வொரு தமிழரும் பாடுபட வேண்டும்.
நமக்குள் இருக்கும் அக முரண்களைக் களைவோம், தூய தமிழர்களை ஒன்றிணைப்போம், இருப்பதை காப்போம், இழந்ததை மீட்போம் என்றார்.












Click it and Unblock the Notifications