டெல்லி விமான நிலையத்தில் பெரும் குழப்பம்-வெங்கையாவின் பேக் மாயம்
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டி3 புதிய முனையம் செயல்படத் தொடங்கியது முதல் ஏகப்பட்ட குழப்பம். விமானங்களின் வருகை, புறப்பாட்டில் குழப்பம் தொடங்கி பயணிகளின் உடமைகள் காணாமல் போவது வரை பெரும் குழப்பமாக உள்ளது.
லேட்டஸ்டாக மூத்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடுவின் பேக் காணாமல் போய் விட்டது. அது இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
டி3 டெர்மினலை சமீபத்தில்தான் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். இதையடுத்து அக்டோபர் 31ம் தேதி முதல் அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.ஆனால் அன்று முதல் இன்று வரை ஏகப்பட்ட குளறுபடிகள், குழப்பங்கள்.
விமானங்கள் தாமதம், பயணிகளின் உடமைகள் காணாமல் போவது, அவை பயணிகளுக்கு வந்து சேருவதில் தாமதம் என பயணிகள் கடும் எரிச்சலில் உள்ளனர்.
இந்த முனையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் உள்ளூர் விமான சேவைதான் பெரும்பாலும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் வெங்கையாவின் பேக் காணாமல் போய் விட்டது. இதுகுறித்து பாஜக தரப்பில் கூறுகையில், நவம்பர் 11ம் தேதி டெல்லியிலிருந்து ஹைதராபாத் கிளம்பினார் வெங்கையா நாயுடு. விமானம் ஏற்கனவே முக்கால் மணிநேரம் தாமதமாகத்தான் கிளம்பியது.
ஹைதராபாத் போய் அவர் இறங்கியதும் தனது பேக்கைக் காணாமல் அதிர்ந்தார் வெங்கையா. இதையடுத்து விமானப்போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேலைத் தொடர்பு கொண்டு கோபத்துடன் பேசினார். பயணிகளின் உடமைகளை இப்படியா ஏர் இந்தியா நிறுவனம் பொறுப்பில்லாமல் கையாளுவது என கொந்தளித்தார்.
அடுத்த நாள் ஏர் இந்தியா தலைவர் நிர்வாக இயக்குநர் அரவிந்த ஜாதவ் வெங்கையா நாயுடுவைத் தொடர்பு கொண்டு, அவரது பேக்கை விரைவில் கண்டுபிடித்துத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை பேக் திரும்ப வரவில்லையாம்.