நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்திடவே ராஜா விலகினார்-கருணாநிதி
சென்னை: நாடாளுமன்ற ஜனநாயகத்தை, அதன் மாண்பை, அதன் நடுநிலையைத் தழைத்திடச் செய்யவும், தக்க வைத்திடவுமான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அண்ணா அந்த நெறியில்தான் நம்மை எல்லாம் வளர்த்தார். அந்த நெறிக்கே விபத்து ஏற்படும்போது, அந்த விபத்திலிருந்து இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதன் அடிப்படையில்தான் ராஜா விலகல் முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான ராசா, தி.மு.க.வுக்கும், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அவர் ஏற்றுக்கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமை உணர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்து, தலித் இனத்தின் கதிரவனாக விளங்குபவர்.
அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று திட்டமிட்ட முயற்சி பல நாள்களாக நடைபெற்று வந்தது. ஜனநாயகக் கூடங்களில் சந்தைக் கடை இரைச்சல் மேலிட்டது.
நாட்டு மக்களுடைய பிரச்னைகளை விவாதிக்க முடியாத அளவுக்கு ஜனநாயக மன்றங்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திடவுமான செயல்கள் தொடர்ந்து ஓராண்டு காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
அவர் மீது என்ன பழி சுமத்தப்படுகிறது? மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய 1999 முதல் எந்த முறை பின்பற்றப்பட்டதோ, அதே முறையைத்தான் ராசா பின்பற்றினார்.
இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட விளக்கங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளாமல், அவர் ராஜிநாமா செய்தே தீர வேண்டும் என்று பிடிவாதம் செய்து, நாடாளுமன்ற அவைகளை நடக்க விடாமல் செய்து வருகிறார்கள்.
எல்லோராலும் நடத்தப்படுகிற குழப்பம் அல்ல; குழப்பத்தை உருவாக்கப் பலர் தேவையில்லை; சிலரே போதும்; நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடைப்படுத்துவதன் மூலம் மத்திய அரசு நிர்வாகம் முழுவதும் ஸ்தம்பித்துப் போகக் கூடிய சூழலை உருவாக்க திட்டமிட்டிருந்தார்கள்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை, அதன் மாண்பை, அதன் நடுநிலையைத் தழைத்திடச் செய்யவும், தக்க வைத்திடவுமான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அண்ணா அந்த நெறியில்தான் நம்மை எல்லாம் வளர்த்தார்.
அந்த நெறிக்கே விபத்து ஏற்படும்போது, அந்த விபத்திலிருந்து இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.
அதனை நிலைநாட்டும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் உள்ள ஆ. ராசாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக்கிக் கொள்வது என்று முடிவு எடுத்து அவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவரும் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கிடுவார் என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications