வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 லட்சம் பேர் மனு: ஜன-5ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க 5 லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர்.
நிராகரிக்கப்படும் மனுதாரர்களுக்கு அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த கடந்த 13-ம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவித்திருந்தோம். அன்று சிறப்பு முகாம்கள் அமைத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பெயர் சேர்க்கைக்கு மட்டும் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட முகாம்களில் சென்னையில் மட்டும் 40 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை வரை 2.98 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. கடைசி நாளையும் சேர்த்து மொத்தம் 5 லட்சம் மனுக்கள் வந்து குவிந்துள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி மாதம் 5-ம் தேதி வெளியிடப்படும்.
இந்த தடவை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். அது என்னவென்றால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் நிராகரிக்கப்படும் மனுதாரர்களுக்கு அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் கடிதம் மூலம் வீட்டுக்கே அனுப்பிவைக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications