ஜெயேந்திரர், விஜயேந்திரரை கைது செய்த எஸ்.பி. பிரேம்குமார் மரணம்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரரை தீபாவளி தினத்தில் ஆந்திராவில் வைத்து கைது செய்தவர் பிரேம்குமார்.
அதிமுக ஆட்சி காலத்தில் காவல்துறையில் முக்கிய பதவி வகித்து வந்த பிரேம்குமார் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். பின்னர் நீண்டகாலம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இவர் இன்ஸ்பெக்டராக இருந்த காலத்தில் ராணுவ வீரரை கைவிலங்கு போட்டு அழைத்து சென்ற வழக்கில் சமீபத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதற்கிடையே சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த பிரேம்குமார் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சர்க்கரை வியாதியும் இருந்தது.
இந் நிலையில், வடபழனி தனியர் மருத்துவமனைக்கு இன்று காலை சிகிசைக்காக வந்த பிரேம்குமார் அங்கு மரணமடைந்தார்.
பிரேம் குமாருக்கு வயது 57. அவரது உடல் முகப்பேரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இவர் தான் தென் மாவட்டத்தை கலக்கி வந்த சீவலப்பேரி பாண்டியை சுட்டுக் கொன்றவர் என்பது குறிப்பிடதக்கது.