மலேசியாவில் பிரபல இந்திய வழக்கறிஞர் குத்திக் கொலை
கோலாலம்பூர்: மலேசியாவில் பிரபல இந்திய வழக்கறிஞர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.
இந்திய வழக்கறிஞர் ஜி. பாலசுந்தரம் (57). மலேசியா இபோவில் உள்ள அவரது வீட்டிற்கு முன் வைத்து அவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு வயிறு மற்றும் தொடைப் பகுதிகளில் 17 இடங்களில் கத்தி குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அவரை 2 பேர் அலுவலகத்தில் இருந்தே பின் தொடர்ந்து வந்துள்ளனர். பின் அவர் வீட்டிற்கு முன் வைத்து அவரைத் தாக்கியுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று அவரை சிலர் தாக்கினர். ஆனால் அதில் அவர் காயங்கள் இன்றி தப்பித்துக் கொண்டார். அவரைத் தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர் என்று ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அவர் விவசாயிகளுக்கும், அரசாங்க நிலத்தில் தங்கியிருப்பவர்களுக்கும் வெளியேற்ற விவகாரங்கள் தொடர்பான வழக்குகளில் இலவசமாக வாதாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.