சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: 20 பேர் படுகாயம்
திருவனந்தபுரம்: சபரி்மலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு வந்த பக்தர்கள் சுமார் 14 மணி நேரம் காத்திருந்து நேற்று காலை 6 மணிக்கு தான் ஐயப்பனை தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலால் 20 பேர் படுகாயமடைந்தனர்.
மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். பின்னர் சபரிமலை புதிய மேல்சாந்தி சசிநம்பூதரியும், மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்தியாக தனஞ்செயன் நம்பூதரியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நேற்று முன்தினம் மாலை நடை திறந்ததுமே கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதனால் இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 11.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. ஐயப்பனை தரிசிக்க முடியாத பக்தர்கள் அனைவரும் விடிய, விடிய வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் நேற்று முன்தினம் இரவு காத்திருந்த பக்தர்கள், நேற்று இரவு குவிந்த பக்தர்கள் என சன்னிதானத்தில் கூட்டம் அலைமோதியது. இதனால நெரிசல் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
நெரிசலில் சிக்கி சிறுவர்கள், சிறுமிகள், வயதான பெண்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீ்ட்டு சன்னிதானம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பம்பைக்கு நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு வந்த பக்தர்கள் சுமார் 14 மணி நேர காத்திருந்த பிறகு நேற்று காலையில் தான் ஐயப்பனை தரிசிக்க முடிந்தது. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த அதிவேக அதிரடிப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications