அம்பாந்தோட்டை துறைமுகம் திறக்கப்பட்டது-ராஜபக்சே பெயர் சூட்டல்
கொழும்பு: அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ரெயரி சூட்டப்பட்டுள்ளது. 390 மில்லியன் டாலர் செலவில், சீன உதவியுடன் அமைந்துள்ள இந்தத் துறைமுகத்தை அதிபர் ராஜபக்சே நேற்று திறந்து வைத்தார்.திறப்பு விழாவையொட்டி முதலாவது கப்பல் துறைமுகத்தில் நங்கூரமிட்டது.
இதைத் தொடர்ந்து பாய்மரக் கப்பல், சரக்குக் கப்பல்கள் துறைமுகம் வந்தன.
துறைமுக விமான சேவைகள் துறை அமைச்சர்களான தயாசிரி திசேரா மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருடன் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
1700 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள இந்த துறைமுகம், கொழும்புவுக்கு அடுத்து பெரியதாகும். சீனா ஹார்பர் என்ஜினீயரிங் கம்பெனி மற்றும் சைனோஹைட்ரோ கார்ப்பொரேஷன் (China Harbour Engineering Company & Sinohydro Corporation) இந்த துறைமுகத்தை அமைத்துள்ளன.
ஒரே நேரத்தில் 3 கப்பல்களை இங்கு நிறுத்த முடியும். இப்போதைக்கு முதல் பகுதி மட்டும் திறக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தின் அடுத்தடுத்த பகுதிகள் கட்டுமானப் பணி நடந்து வருகின்றன.
இந்த துறைமுகம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆசிய - ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் கடல் வழியில் உள்ள முக்கிய துறைமுக நாடு இலங்கைதான் என்பதால், கடல் வழி வாணிகத்தில் இலங்கைக்கு பெரும் உதவியாக இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது.
அதேநேரம் இந்தத் துறைமுகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான சீன வீரர்கள், முன்னாள் வீரர்கள் முகாமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.