“இரண்டு பிராமண அமைச்சர்கள் ஏன்?” விஜய் அரசில் சர்ச்சை… இயக்குநர் திருச்செல்வம் சொன்ன பதில்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் தீவிர விவாதத்தை கிளப்பி வருகிறது. குறிப்பாக அவரது அமைச்சரவை பட்டியல் வெளியானபோது பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்தனர். ஆதரவும் விமர்சனமும் ஒரே நேரத்தில் எழுந்த நிலையில், தற்போது இயக்குநர் திருச்செல்வம் பேசிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தனது அமைச்சரவையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுத்திருப்பது பற்றி ஏற்கனவே பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். அதே சமயம், "இரண்டு பிராமணர்களுக்கு அமைச்சர் பதவி ஏன்?" என்ற கேள்வியும் சில தரப்பில் எழுந்தது. இந்த விமர்சனத்துக்குத்தான் தற்போது இயக்குநரும், நடிகருமான திருச்செல்வம் நேரடியாக பதில் அளித்துள்ளார்.

இயக்குனர் திருச்செல்வம் பேச்சு
அவர் பேசியதாவது, தமிழகம் வெற்றிக் கழகத்தின் முதல் தலைவராக விஜய் நேரடியாக பதவியேற்றிருக்கிறார். அதனை தொடர்ந்து தனது நிர்வாக கட்டமைப்பையும் அறிவித்துள்ளார். இதில் சமூக சமநிலையை பேணும் வகையில் பல்வேறு பின்னணியில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது முக்கியமான விஷயம் என்றார்.
குறிப்பாக, "இரண்டு பிராமணர்களை அமைச்சர்களாக நியமித்திருக்கிறார் என்று சிலர் விமர்சிக்கிறார்கள். அதில் ஒருவருக்கு அறநிலை துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதை பலர் விமர்சித்து வருகின்றனர். ஜெயலலிதா அம்மையார் சமூக நீதிகாத்த வீராங்கனைனு நாமதான் சொன்னோம். அவங்களும் பிராமணர் தானே... அவங்கள நம்பிய நாம் இவங்களையும் நம்பலாமே. எல்லோரும் மனிதர்கள் தான் நல்லதை நினைப்போம் நல்லதை செய்வோம் என்று திருச்செல்வம் பேசி இருக்கிறார்.
இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் "விஜய் சமூக சமநிலையோடு யோசித்து முடிவு எடுத்திருக்கிறார்" என்று ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன. இன்னொரு பக்கம் "அமைச்சர் தேர்வு திறமையை அடிப்படையாகக் கொண்டதா, சமூக அடிப்படையிலா?" என்ற விவாதமும் கிளம்பியுள்ளது.
ஆதவ் அர்ஜுனா விளக்கம்
அதே நேரத்தில் இது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, அறநிலைத்துறைக்கு இந்த சாதியிலிருந்து அமைச்சரை நியமித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். ரமேஷை அமைச்சராக்கும் வரை அவர் என்ன ஜாதி என்று எங்களுக்கு தெரியாது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா உலகில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய், முதல் நாளிலிருந்தே அதிரடி முடிவுகள் எடுத்து வருகிறார் என்ற கருத்தும் பரவி வருகிறது. அந்த சூழலில் திருச்செல்வத்தின் இந்த ஆதரவு பேச்சு மேலும் கவனம் ஈர்த்துள்ளது.
விஜய் அரசியலுக்கு வந்த ஆரம்பத்திலிருந்து திருச்செல்வம் தொடர்ந்து அவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார். அதேபோல விஜய் ஜெயித்ததும் அவருக்கு வாழ்த்து சொல்லி தன்னுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்திருந்தார். தினமும் அரசியல் பழகுவோம் என்ற தலைப்பில் சில வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதில் அரசியல் நகர்வுகள், அரசியல் பிரச்சனைகள் குறித்த பல விஷயங்களுக்கும் திருச்செல்வம் கருத்து தெரிவித்து வருகிறார்.
இப்போது இணையத்தில் ஓடும் ஒரே கேள்வி - விஜயின் இந்த அமைச்சரவை முடிவு உண்மையிலேயே புதிய அரசியல் மாற்றத்துக்கான சிக்னலா? என்பதுதான்.













Click it and Unblock the Notifications