தேர்தல் நாளில் தவெக வேட்பாளரிடம் எகிறிய சேகர் பாபு.. இப்போ விரட்டி வந்தது 4 பிரிவுகளில் வழக்கு!
சென்னை: சென்னை துறைமுகம் தொகுதி தேர்தல் நாளான ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற மோதல் தொடர்பாக, திமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது சென்னை மாநகர போலீசார் 4 பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தரப்பினருக்கும், தவெக வேட்பாளர் சினோரா அசோக் தரப்பினருக்கும் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி தகராறு ஏற்பட்டது.

வாக்குப்பதிவு நாளில் வெடித்த மோதல்
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சினோரா அசோக் ஆகியோர் களம் கண்டனர்.
வாக்குப்பதிவு நாளன்று துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றின் அருகே திமுக மற்றும் தவெக தொண்டர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள், தவெக வேட்பாளர் அசோக் சினோரா மற்றும் அவரது தரப்பு வழக்கறிஞரான விஜய்குமார் ஆகியோரைத் தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகளால் பேசித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
4 பிரிவுகளின் கீழ் பாய்ந்தது வழக்கு
தேர்தல் நான்று நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தவெக வேட்பாளர் சினோரா அசோக் தரப்பில் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், ஆபாசமாகப் பேசுதல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேர்தலில் வென்ற சேகர்பாபு - அரசியல் பின்னணி
துறைமுகம் தொகுதியில் வாக்குப்பதிவு நாளில் இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேறியிருந்தாலும், தேர்தல் முடிவுகளில் சேகர்பாபுவே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நிலவரம்: கடும் போட்டிக்கு இடையே தவெக வேட்பாளர் சினோரா அசோக்கை விட 11,750 வாக்குகள் கூடுதலாகப் பெற்று சேகர்பாபு தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், திமுக-வின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது தவெக வேட்பாளரைத் தாக்கியதாகப் பாய்ந்துள்ள இந்த வழக்கு, சென்னை அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்வாக உற்றுநோக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications