மதுரை-கொழும்பு இடையே விமான சேவை-இலங்கை அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பிராந்தியத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன மேனேஜர் சமந்தா நாகவட்டே, பகுதி மேனேஜர் அஹமத் மசாஹிம் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மதுரை விமான நிலையத்திற்கு வந்து அங்குள்ள வசதிகளைக் கண்டறிந்தனர். அவர்கள் டிராவல் ஏஜென்டுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கொழும்பிலிருந்து மதுரைக்கு விமான சேவையை நடத்துவது தொடர்பாக அப்போது ஆலோசிக்கப்பட்டது. விரைவில் இதுதொடர்பான திட்டம் ஒன்றை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் அளிக்கவிருக்கிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் இந்த விமான சேவைத் தொடங்கலாம் என்று இலங்கை அதிகாரிகள் கூறினர்.
தற்போது வளைகுடா மற்றும் பிற நாடுகளுக்குச் செல்பவர்கள் திருச்சியில் இருந்துதான் செல்கின்றனர். மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ளதால் திருச்சியையே அனைவரும் தேர்வு செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மதுரை விமான நிலையத்தில் சமீபத்தில்தான் புதிய முனையம் அதி நவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து அங்கு விமான சேவையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல்வேறு நகரங்களுக்கு புதிய விமானங்கள் விடப்பட்டுள்ளன. தினசரி 9 சேவைகள் தற்போது மதுரை விமான நிலையத்தில் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications