குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை-கனமழை எச்சரிக்கை
சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் இன்றும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் வட்டணத்தில் 19 செ.மீ. மழை பதிவானது. தொண்டியில் 13 செ.மீயும் ராமநாதபுரத்தில் 11 செ.மீயும் பழனி, கும்பகோணம், மருங்காபுரி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீயும் மழை பெய்துள்ளது.
இந் நிலையில், இலங்கை அருகே தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கைக்கு மேலே வளிமண்டலத்தில் உருவான காற்று சுழற்சி தொடர்ந்து அங்கேயே நீடிக்கிறது. இதற்கிடையே, இலங்கை அருகே தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றார்.