நூல் விலை உயர்வைக் கண்டித்து சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக்
சங்கரன்கோவில்: தமிழகத்தில் ஈரோடுக்கு அடுத்தபடியாக சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இதில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் லுங்கி, சேலை, வேட்டி, துண்டு, கைக்குட்டை ஆகியவை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
சமீபகாலமாக விசைத்தறிக்கு பயன்படும் 10-ம் நம்பர் நூல் கிலோ ரூ.55ல் இருந்து 85 ஆகவும், 16-ம் நம்பர் நூல் ரூ.80ல் இருந்து 155 ஆகவும், 60-ம் நம்பர் நூல் ரூ.750ல் இருந்து 1400 ஆகவும், 40-ம் நம்பர் நூல் கண்டு ரூ.500ல் இருந்து 1000 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இதனால் விசைத்தறி தொழில் நலிவடையும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.
விஷம்போல் உயர்ந்து வரும் நூல் விலையைக் கட்டுபடுத்த வேண்டும். வெளிநாட்டுக்கு பருத்தி ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் எனக் கோரி சங்கரன்கோவிலில் உள்ள மாஸ்டர் வீவர் அசோசியேஷன், திருமுருகன் விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நேற்று ஒருநாள் மட்டும் விசைத்தறி கூடங்களை மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.