பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தை மீடியாக்கள் திசை திருப்புகின்றன-தயாநிதி மாறன்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக அன்று நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை இப்போதைய பிரச்சினையுடன் முடிச்சுப் போட்டு சில ஊடகங்கள் திசை திருப்பி குழப்பப் பார்க்கின்றன. மேலும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தை முழுமையாக வெளியிடாமல் அவை பாரபட்சமாக செய்தி வெளியிடுகின்றன என்று கூறியுள்ளார் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும், தற்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறன்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,நான் தொலை தொடர்புத்துறை மந்திரியாக இருந்தபோது அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக கடந்த 2006ம் ஆண்டு பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து தற்போதைய பிரச்சனையோடு தொடர்பு படுத்தி சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவது தவறானது.
கடுகை மலையாக்க ஊடகங்கள் முயலுகின்றன. பிரதமருக்கு எழுதிய அந்த கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வெளியிட்டு சர்சையாக்க முயற்சி நடந்துகொண்டிருக்கின்றது.
ஊடகங்களே இந்த பிரச்சனையின் தீர்ப்பை சொல்ல முனைவது வருத்தத்துக்குரியது.
பிரதமர் மன்மோகன்சிங் மிகவும் துணிவான, நேர்மையான தலைவர். தொலை தொடர்பு துறை அமைச்சர் என்ற முறையில் சில வரையறைகளை அறிந்துகொள்வதற்காக மட்டுமே பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் வசம் இருந்த அலைக்கற்றையை தொலைத் தொடர்புத்துறை வசம் கொண்டு வர முயற்சித்தது நான் தான். அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக பிரதமர் கட்டாயப்படுத்தப்பட்டார் என்ற செய்தி முற்றிலும் தவறானது.
தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக நான் இருந்தது வரையில் ஒரு சிறு சர்ச்சையும் இல்லை.
திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. அதை சிதைக்கும் முயற்சி பலனளிக்காது என்றார் அவர்.