விஜயகாந்த்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி மாணவர்கள் அடிதடி, மோதல்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அருகே மாமன்டூரில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்ளது. இது தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமானதாகும்.
இங்கு விடுதியில் தங்கியுள்ள தங்களை சீனியர் மாணவர்கள் கேலி செய்து தாக்கியதாக ஜூனியர் மாணவர்கள் விடுதி வார்டனிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து இரு தரப்பு மாணவர்களும் அவரவர் பெற்றோரை அழைத்து வருமாறு வார்டன் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜூனியர் மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் சீனியர் மாணவர்கள். மேலும், பெற்றோர்களுடன் வந்த ஜூனியர் மாணவர்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் கல்லூரி கேட்டை சீனியர் மாணவர்கள் இழுத்து மூடினர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.