எதிர்க்கட்சிகளின் தொடர் நெருக்குதல்-ஜேபிசி விசாரணைக்கு மத்திய அரசு சம்மதிக்கும்?
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படக் காரணமாக இருந்த ராஜா தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
ஆனால் மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர் ராஜாவை நீக்க திமுக சம்மதித்தது. இதையடுத்து தற்போது இந்த விவகாரம் குறித்து ஜேபிசி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இதை வலியுறுத்தி 11 நாட்களாக நாடாளுமன்றத்தை அவை முடக்கி வருகின்றன.
ஒரு நாள் கூட கூட்டத்தை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட 2 முறை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. பிரணாப் முகர்ஜி தலைமையிலான இக்கூட்டங்களில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. ஜேபிசி விசாரணையே தேவை என்று எதிர்க்கட்சிகள் உறுதிபட கூறி வருகின்றன.
இந்த நிலையில், ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சில கட்சிகள், பேசாமல் ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று கூற ஆரம்பித்துள்ளன. குறிப்பாக திரினமூல் காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளது. இக்கட்சியின் எம்.பிக்கள் எதிர்க்கட்சி எம்.பிக்களுடன் இணைந்து கோஷமிட்டதால் காங்கிரஸ் குழப்பமடைந்துள்ளது.
இதையடுத்து ஜேபிசி விசாரணைக்கு காங்கிரஸும், மத்திய அரசும் சம்மதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.