Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. சாயம் கொஞ்சம் கொஞ்சமாக அல்ல, வேகமாக வெளுத்து வருகிறது-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக அல்ல, வேகவேகமாக வெளுத்துக் கொண்டிருக்கின்றது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி: பெரியாரின் கொள்கைகளையும், அண்ணாவின் கோட்பாடுகளையும் நீங்கள் அடகு வைத்து விட்டதாக கொடநாட்டில் குறட்டை விட்டு ஓய்வெடுக்கும் ஜெயலலிதா பெயரில் அறிக்கை வெளிவந்துள்ளதே?

பதில்: "விநாயகர் சதுர்த்தி'' - "சரஸ்வதி பூஜை'' போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வாழ்த்துச் செய்தி கொடுத்தும் - திருவரங்கம் கோவிலுக்கு விமானத்திலே பறந்து சென்று ரெங்கநாதனுக்கு பூஜை நைவேத்தியங்கள் செய்தும் ஜெயலலிதா பெரியாரின் கொள்கைகளையும், அண்ணாவின் கோட்பாடு களையும் காப்பாற்றுவதைப் போல நான் காப்பாற்றவில்லை என்கிறார் போலும்!

என்னுடைய அரசியல் குருகுலமே பெரியாரின் ஈரோட்டில் தொடங்கியது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். ஜெயாவின் குருகுலம் எது என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். எனவே என்னுடைய கொள்கை, கோட்பாடு பற்றி விமர்சிக்க ஜெயாவிற்கு தகுதி போதாது! இன்னும் கூறுகிறேன், ஜெயா ஆட்சியிலே இருந்தபோது அடையாறு பகுதியில் தலைமைச் செயலகத்தை ஒன்றைக் கட்டப் போவதாக பெரிதாக அறிவிப்புகளைச் செய்ததோடு நிற்காமல், அதற்காக அடிக்கல் நாட்டு விழா ஒன்றையும் செய்தார். அப்போது ஏடுகளில் அந்தச் செய்தி எப்படி வந்தது தெரியுமா?

"பூஜை நடந்த இடத்தில் சதுர வடிவிலான கிரானைட் கல் வைக்கப்பட்டு அதில் தனலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. சாத்திர சம்பிரதாயப்படி பூஜைகள் நடைபெற்றன. முதல்-அமைச்சர் ஜெயலலிதா கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தார். அதன்பின் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். கற்பூர ஆரத்தியை தொடர்ந்து அனைவருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தன் கைப்பட விபூதி குங்கும பிரசாதம் வழங்கினார். ஏறக்குறைய 15 நிமிட நேரம் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.''

இப்படிப்பட்ட ஜெயாவிற்கு பெரியார் கொள்கை, அண்ணா கோட்பாடுகளைப் பற்றி பேசுவதற்கு ஏதாவது தகுதியிருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் கூற வேண்டும்.

கேள்வி: ஜெயாவின் சில நாள் அறிக்கைகளின் கீழே அவர் கையெழுத்திட்டு அனுப்புகிறார். ஒரு சில நாட்களில் அவருடைய கையெழுத்து கூட இல்லாமல் அவருடைய பெயரை தட்டச்சு செய்தே ஏடுகளுக்கு அனுப்புகிறார்களே?

பதில்: யாரோ எழுதுகிறார்கள் - யாரோ தட்டச்சு செய்து அதனை "பேக்ஸ்'' மூலம் அனுப்புகிறார்கள் - சில நாட்கள் அதைப் படித்து அம்மையார் கையெழுத்து போடுகிறார் - சில நாட்களில் அவருக்கு அதற்கே நேரம் கிடைப்பதில்லை. எனவே அதையும் தட்டச்சு செய்தே அனுப்பிவிடுகிறார்கள். எப்படி அனுப்பினால் என்ன, அதை வெளியிடுவதற்காகவே தமிழ்நாட்டில் சில ஏடுகள் தயாராக இருக்கின்றனவே?

கேள்வி: "உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்'' என்ற அடிப்படையில் நீங்கள் பேசக் கூடியவர் என்பது மத்திய அரசுக்கு தெரியாதா என்ன என்று ஜெயா தன் அறிக்கையிலே கேள்வி கேட்கிறாரே?

பதில்: உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம் கூட அல்ல, விஷத்தைக் கொண்டிருப்பவர் யார் என்பதை மத்திய அரசு நன்றாக புரிந்து கொண்டுதான் தொடர்ந்து அவருடைய அறிக்கைகளுக்கெல்லாம் முகத்திலே அறைவதைப் போல ஒவ்வொரு நாளும் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றது. அப்படியிருந்தும் புத்தி வரவில்லை என்றால் யார் என்ன செய்வது? தோழமையோடு இருந்தாலும், தோழமை இல்லாத நிலையிலே இருந்தாலும் இரண்டிலும் உறுதியாக இருக்கக்கூடியவர் கருணாநிதி என்று இந்திரா காந்தியாலேயே பாராட்டப்பட்டவன் நான்.

"பதிபக்தி இல்லாதவர் சோனியா'' என்றும், "வெளிநாட்டுக்காரி சோனியா'' என்றும் திமிரடியாகப் பேசிவிட்டு, இப்போது நிபந்தனையற்ற ஆதரவுக்குத் தயார் என்று அறிக்கைவிடும் ஜெயாவிற்குத்தான் உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்! இது மத்தியிலே உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்!

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, ஒரு பிரதமர் இரவு 10 மணிக்கெல்லாம் தூங்கப் போகலாமா என்ற கேள்வியை எழுப்பியவரும் இதே ஜெயலலிதாதான். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசு செயல்படாத அரசாக இருக்கின்றது என்றும், தனக்கும் பிரதமருக்கும் தலைமுறை இடைவெளி இருப்பதாகவும் கூறியவரும் இதே ஜெயலலிதாதான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, நடுநிலை தவறி அவர் நடப்பவர் என்றும், தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் அவர் என்றும் விமர்சித்தவரும் ஜெயலலிதா தான். இதை தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார்கள்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு கருணாநிதியால் விளக்கம் அளிக்க முடியுமா என்று ஜெயலலிதா கேட்கிறாரே?

பதில்: தன்னைப் போலவே என்னையும் நினைத்துக் கொள்கிறார். இன்றைக்கு என்னைப் பார்த்து சி.பி.ஐ. அதிகாரியை மாற்ற யார் காரணம் என்று கேட்டிருக்கிறார். ஜெயா அவர்களே, அதற்கு நான் காரணமல்ல, நிச்சயமாக நான் காரணமல்ல. இதற்கு மேலும் உங்களிடம் அதற்கு ஆதாரம் ஏதாவது இருக்குமானால், தற்போது உங்களைப் பற்றி நான் இதோ கூறுகின்ற அடுக்கடுக்கான ஆதாரங்களை போலச் சொல்லத் தயாரா?

ஜெயா மத்தியிலே உள்ள அரசோடு தோழமையாக இருந்த காலத்தில் ஒரு சில அதிகாரிகளின் பெயர்களை தன் கைப்படவே எழுதி, அவர்களையெல்லாம் மாற்ற வேண்டும் என்றும், அவர்களுக்குப் பதிலாக தான் குறிப்பிடும் நபர்களை அந்த இடத்திலே நியமிக்க வேண்டுமென்றும் கோரியது ஏடுகளிலே வெளிவந்ததையெல்லாம் ஜெயா மறந்திருக்கலாம். நான் நினைவுபடுத்தட்டுமா?

- முன்னாள் தலைமைச் செயலாளர் அரிபாஸ்கர் தற்காலிக வேலை நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

- சி.ராமச்சந்திரன் ஐ.ஏ.எஸ். தற்காலிக வேலைநீக்கம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

- நெய்வேலி நிலக்கரி நிறுவன முன்னாள் தலைவரும், நிர்வாக இயக்குனருமான பூபதியின் இடைக்கால வேலை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்.

- பின்வரும் துறைமுக அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். தூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவர் எஸ்.மச்சேந்திரநாதன் பாரதீப் துறைமுகத்துக்கும், நியூ மங்களூர் துறைமுகக் கழகத் தலைவர் பி.கே.மொகாந்தி தூத்துக்குடி துறைமுகத்திற்கும், பாரதீப் துறைமுகத் தலைவர் எஸ்.கே. மகாபத்ரா நியூ மங்களூர் துறைமுகத்திற்கும், நியூ மங்களூர் துறைமுகத் தலைவர் ஆர்.ராம்குமார் காண்ட்லா துறைமுகத்துக்கும் மாற்றப்பட வேண்டும்.

- ஏற்கனவே அளித்துள்ள பட்டியலின் அடிப்படையில் பின்வரும் நிறுவனங்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற இயக்குநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ஷிப்பிங் கார்பரேஷன் ஆப் இந்தியா, டிரட்ஜிங் கார்பரேஷன் ஆப் இந்தியா, சென்ட்ரல் இன்லெண்ட் வாட்டர் டிரான்ஸ் போர்ட் கார்பரேஷன் லிமிடெட்...

மும்பையில் இணை இயக்குநராக (ஆய்வு) உள்ள எஸ்.கே.மண்டல் பெங்களூரில் கம்பெனிப் பதிவாளராக நியமிக்கப்பட வேண்டும்.

பெங்களூரில் கம்பெனிப் பதிவாளராக உள்ள பி.கே.பன்சால் மும்பையில் இணை இயக்குநராக (நிர்வாகம்) நியமிக்கப்பட வேண்டும்.

சென்னையில் உதவி ஆய்வு அதிகாரியாக உள்ள சுக்லா பெங்களூரில் உதவி கம்பெனிப் பதிவாளராக நியமிக்கப்பட வேண்டும்.

டெல்லியில் பொது இணை இயக்குநராக (புலனாய்வு) உள்ள தன்ராஜ் ஐதராபாத் கம்பெனிப் பதிவாளர் அலுவலகத்திற்கும், பம்பாய் அலுவலகத்தில் துணை கம்பெனிப் பதிவாளராக உள்ள ஜெயசேகர், ஐதராபாத் உதவி கம்பெனிப் பதிவாளராகவும், அகமதாபாத்தில் ஓ.எல். ஆக இருக்கும் பிரிஜ் கிஷோர் மும்பை கம்பெனிப் பதிவாளராகவும் மாறுதல் செய்யப்பட வேண்டும்.

- ஐதராபாத்தில் உதவி கம்பெனிப் பதிவாளர் அலுவலராக உள்ள விஜயபாஸ்கர் சென்னையில் பெஞ்ச் அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும். (இந்தப் பட்டியல் இன்னும் நீளுகிறது)

இவ்வளவு பெரிய பட்டியல் ஜெயாவினால் கொடுக்கப்பட்ட காரணத்தால், அவற்றையேற்க வாஜ்பாய் அரசு முன்வராததால் மத்திய அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்க்கப்பட்டது. அப்போது "தி பயோனியர் நாளேடு'' பா.ஜ.க. அணியிலே இருந்த ஜெயலலிதா அரசை பிளாக்மெயில் செய்ததும், முதுகில் குத்தியதும் எந்த நெறிமுறைக்கும் உகந்தது அல்ல. ஜெயலலிதாவிடம் சரி எது - தவறு எது - என்று பிரித்துப்பார்த்து நடந்து கொள்ளக்கூடிய குணம் கிடையாது. பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் ஜெயலலிதா என்று அவருக்கு புகழாரங்கள் சூட்டியிருந்தன.

22-8-1999 அன்று வெளி வந்த "தினமணி''யில் வாஜ்பாய் பேச்சில், "அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருந்த காலம்தான் எனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலம். அரசைக் கவிழ்க்கப் போவதாக சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளன்று கூட அவர் அச்சுறுத்தினார். ஆனால் அவரது பிளாக்மெயில் தந்திரத்திற்கு நாங்கள் அடிபணியவில்லை'' என்று உள்ளது.

கேள்வி: ஜெயா தனது அறிக்கையில் கூறும்போது, ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்றால் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழுவினை கேட்டுப்பெற வேண்டியது தானே என்று சொல்கிறாரே?

பதில்: நான் திரும்பக் கேட்கிறேன். ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் தவறு நடந்திருக்கிறது என்றால், தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட பிறகு, அதைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று பிரதமரும், மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், வீரப்ப மொய்லி போன்றவர்களும் மீண்டும் மீண்டும் உறுதியளித்த பிறகும் அதற்கு முன்வர பா.ஜ.க.வும், இடதுசாரிகளும் தயங்குவது ஏன்? முறைப்படி மக்களவையில் விவாதிக் கப்பட்ட பிறகு, அந்த அறிக்கை அனுப்பப்பட வேண்டிய பொதுக் கணக்குக் குழுவின் முன்னால் கொண்டு போகப்பட்டு, அந்தப் பொதுக் கணக்குக் குழுவிடம் விவரங்களைத் தெரிவிக்க வேண்டியதுதானே? அந்தக் குழுவின் தலைவராக அவர்களுக்கு வேண்டிய பா.ஜ.க.வின் முக்கிய தலைவர் ஒருவர்தானே இருக்கிறார்.

தணிக்கை குழு அறிக்கையிலே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் இதற்கு முன்பெல்லாம் பொதுக் கணக்குக் குழுவின் முன்னாலேதான் விசாரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மட்டும் அதற்கிணங்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழு வேண்டுமென்று கேட்பது ஏன்? இதிலே என்ன அரசியல் உள்நோக்கம் இடம் பெற்றுள்ளது?

கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஜெயா ஏன் பதிலளிக்க வில்லை என்று நீங்கள் கேட்டதற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பதிலளித்திருக்கிறார் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்: நான் கேள்வி கேட்டது ஜெயாவை! அதற்கு அவர் பதில் சொல்ல வக்கில்லாமல், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பதிலளித்துவிட்டார் என்று கூறி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமல்ல, அவர்களைவிட அதிக தோழமை கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான டி.ராஜாவே கேட்டதாக "இந்து'' நாளிதழில் "ஜெயலலிதா, தன்னுடைய நிலையை தெளிவாக விளக்க வேண்டும்'' என கொட்டை எழுத்துக்களில் செய்தி வந்துள்ளது. ஜெயலலிதாவின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக அல்ல, வேகவேகமாக வெளுத்துக் கொண்டிருக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+