'சத்யம்': மேடாஸ் நிறுவனப் பெயர் மாறுகிறது!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தை உருவாக்கிய ராமலிங்க ராஜுவால் நிறுவப்பட்ட இன்னொரு நிறுவனமான மேடாஸ் பெயர் மாறுகிறது.
சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் மூத்த மகன் தேஜா ராஜுவால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிறுவனம் மேடாஸ் இன்ப்ரா. ராமலிங்க ராஜுவின் ரூ 14000 கோடி ஊழல் காரணமாக சத்யம் சாம்ராயம் சரிந்துவிழ, முக்கிய காரணமே இந்த மேடாஸ்தான். இந்த நிறுவனத்தை சத்யத்துடன் இணைக்க ராஜு முயன்றபோதுதான், சத்யம் சரிந்தது.
இப்போது சத்யம் மஹிந்திராவின் கைக்குப் போய், மஹிந்திரா சத்யம் என்ற பெயரில் இயங்குகிறது. அடுத்து, ராஜுவின் மகன் வசமிருந்த மேடாஸ் இப்போது ஐஎல் அண்ட் எப்எஸ் வாங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் பெயரை முழுமையாக மாற்ற ஐஎல் அண்ட் எப்எஸ் முடிவு செய்துள்ளது.
சத்யம் என்பதை திருப்பிப் போட்டால் மேடாஸ் என்று வரும். எனவே ஏற்கெனவே பிரச்சினைக்குள்ளான சத்யம் நிறுவன நிழல் எந்த வகையிலும் மேடாஸில் படியக்கூடாது என்று விரும்பும் ஐஎல் அண்ட் எப்எஸ், இப்போது மேடாஸின் பெயரை, "ஐஎல் அண்ட் எப்எஸ் எஞ்ஜினீயரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி" (IL&FS Engineering and Construction Company) என்று மாற்றியுள்ளது.
இத்தகவலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விமல் கவுசிக் தெரிவித்தார். 2011 ஜனவரி முதல் இந்த புதிய பெயரில் நிறுவனம் இயங்கும்.