முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி் மீண்டும் மனு-அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: என்னை விடுதலை செய்யவேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்கவில்லை. விடுதலை குறித்த எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றுதான் கேட்டுள்ளேன். எனவே எனது மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 19 வருடங்களுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். சமீபத்தில் தன்னை சிறையில் சித்திரவதை செய்வதாக அவர் புகார் கூறியதைத் தொடர்ந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி அரசுக்கு விண்ணப்பித்தார். அதை தமிழக அரசு நிராகரித்தது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த கோர்ட், இதுகுறித்து பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து புதிதாக சிறை ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் நளினியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்நது மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடினார் நளினி. அந்த மனுவும் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடியானது.
தற்போது இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார் நளினி.
அதில்,
மரண தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை செய்ய கோர முடியாது என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்தை மறுஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்ற உத்தரவு எதுவும் எனது விடுதலையை மறுத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்படவில்லை.
முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். என்னை விடுதலை செய்யவேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்கவில்லை. விடுதலை குறித்த எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றுதான் கேட்டுள்ளேன். எனவே எனது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் 6.4.10 அன்று பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார் நளினி.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எலிப்பே தர்மாராவ், அரி பரந்தாமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 2 வாரத்திற்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications