பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது
இதைத் தொடர்ந்து சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட 5 நகரங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது.
இதையடுத்து கடன் மோசடியில் ஈடுபட்ட எல்ஐசி ஹவுசிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பேங்க் ஆப் இந்தியா மற்றும் சென்ட்ரல் வங்கியின் பொது மேலாளர்கள், பஞ்சாப் நேசனல் வங்கியின் தலைமை பொது மேலாளர் உள்பட 8 பொதுத்துறை வங்கிகளி்ன் அதிகாரிகளை சிபிஐ இன்று கைது செய்துள்ளது.
வீட்டுக் கடன்கள் வழங்க லஞ்சம் வாங்கியது உள்பட பல்வேறு ஊழல்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்ஐசி நிறுவனத்தின் முதலீடுகள் பிரிவின் செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் முக்கிய ரியல் எஸ்டேட் புள்ளியும் கைதாகியுள்ளதாகத் தெரிகிறது.
மணி மேட்டர்ஸ் நிறுவன தலைவரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களாகவே எல்ஐசியில் நடந்த பல கோடி வீட்டுக் கடன் ஊழல் தொடர்பாக செய்திகள் வெளியானபடி இருந்தன. இந் நிலையில் ரகசிய விசாரணைகளை நடத்தி வந்த சிபிஐ நேற்று சில வங்கிக் கிளைகள், எல்ஐசி அலுவலங்களிலும் ரெய்ட் நடத்தியது.
இந் நிலையில் இன்று அதிரடியாக இந்த அதிகாரிகளை கைது செய்துள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் இணைந்து போலிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் தயாரித்து, இல்லாத வாடிக்கையாளர்கள் மற்றும் பொய்யான நிலங்களின் பேரில் பல கோடி ரூபாயை கடனாகப் பெற்று ஏமாற்றியுள்ளனர் இந்த அதிகாரிகள்.
இந்த விவகாரத்தில் நடந்துள்ள ஊழலின் அளவு மிக அதிகம் என்றும், இதனால் நியாயமாக கடனுக்கு விண்ணப்பிக்கும் பல நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் ஊழலில் கொள்ளை போயிருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஊழல் தொடர்பாக மேலும் ஏராளமான விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.