நியூசிலாந்து சுரங்கத்தில் சிக்கிய 29 தொழிலாளர்களும் பலி
கிரேமெளத்: நியூசிலாந்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 29 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிரேமெளத் பகுதியில் உள்ள பைக் ரிவர் நிலக்கரிச் சுரங்கத்திற்குள் இந்த 29 பேரும் சிக்கியிருந்தனர். கடந்த ஐந்து நாட்களாக இவர்கள் உள்ளேயே தவித்து வந்தனர். வெடிவிபத்து ஏற்பட்டதில் சுரங்கம் மூடிக் கொள்ளவே இவர்கள் அனைவரும் உள்ளே மாட்ட நேரிட்டது.
இந்தநிலையில் இன்று பிற்பகல் இன்னொரு வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கம் முற்றிலுமாக மூடி விட்டது. இதையடுத்து உள்ளே சிக்கியிருந்த 29 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸ் கண்காணிப்பாளர் கேரி நோல்ஸ் கூறியுள்ளார்.
முதலில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து மிகவும் அபாயகரமான மீத்தேன் வாயு சுரங்கத்திற்குள் பரவியிருந்தது. இதனால் 29 பேரையும் மீட்க முடியாமல் மீட்புக் குழுவினர் பரிதவித்தனர்.
இந்த நிலையில் இன்று மிகப் பெரிய அளவிலான வெடிவிபத்து நடந்துள்ளதால் உள்ளே இருந்த அனைவருமே உயிரிழந்திருக்க வேண்டும் என்று போலீஸார் கூறுகின்றனர். யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கண்காணிப்பாளர் நோல்ஸ் தெரிவித்தார்.
தற்போது 29 பேரின் உடல்களையும் மீட்கும் பணியில் போலீஸார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.