ஜனவரிக்குப் பின் கூட்டணி குறித்த முடிவு: ராமதாஸ்

காங்கேயத்தில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்ட ராமதாஸ் கூறுகையில்,
பல ஆண்டு கால கோரிக்கை திட்டமான ஈரோடு- பழனி ரயில் பாதை திட்டத்துக்கு, ஆங்கிலேயர் இயற்றிய பழைய சட்டத்தின்படி நிலம் ஆர்ஜிதம் செய்வது முறையல்ல. அந்த சட்டத்தை திருத்தி ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்கள் போல் சந்தைவிலை கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
மேலும், நிலம் இழக்கும் குடும்பத்தின் வாரிசுக்கு வேலை, 30 ஆண்டுகளுக்கு உதவித் தொகை, ஆகிய சலுகைகள் வழங்க வேண்டும். இத் திட்டத்திற்கு எதிராக போராடுவதால் நான் அரசுக்கு எதிரானவன் என மாநில அரசு கூறி வருகிறது. பாமக என்றுமே மக்களுக்காக போராடும்.
வறுமையை ஒழிப்போம் என்று அரசு கூறி வருகிறது. ஆனால், மதுக்கடைகள் அதிகரித்துள்ளதால், வறுமை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.
மாநில அரசு, இலவச மின் மோட்டார்களை இரண்டு லட்சம் பேருக்கு வழங்குவதாகக் கூறி செயல்படுத்தியது. இதில், முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
தற்போது, எந்தக் கூட்டணியிலும் பாமக இல்லை. சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த முடிவு, 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பின்னரே வெளியிடப்படும். அதுவரை எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது.
தற்போது, ஜவுளித் தொழில் சந்தித்துவரும் நெருக்கடிக்கு மத்திய அரசின் ஏற்றுமதிக் கொள்கையே காரணம். இதனால், வட இந்திய வர்த்தகர்கள் பெருமளவில் பஞ்சு, நூல் பதுக்கி கொள்ளை லாபம் அடிக்கின்றனர்.
இப் பாதிப்புகளை தடுக்க உடனடியாக பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிப்பதோடு, முன்பேர வர்த்தக பட்டியலில் இருந்து பருத்தியை நீக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. அந்த குழுவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரே தலைவராக இருப்பார். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அதிக அளவில் உறுப்பினர்களாக நியமிக்கப்படவும் வழி இருக்கிறது. எனவே கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவது பயன்தராது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications