நரேந்திர மோடியை வரவிடாமல் தடுத்ததால் நிதீஷுக்கு வெற்றி-நல்லகண்ணு

சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் 'அயோத்தி தீர்ப்பும், மதச்சார்பின்மையும்' என்ற கருத்தரங்கம் நடந்தது. அதில் அ. மார்க்ஸ் எழுதிய 'பாபர் மசூதி ராமஜென்ம பூமி தீர்வும், தீர்ப்பும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
அதில் பேசிய நல்லகண்ணு, இந்தியா விடுதலை பெற்ற பிறகு, 1952ம் ஆண்டு முதல் தேர்தல்கள் நடைபெற்றன. இப்போது பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்துள்ளன.
உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்து மிகப்பெரிய மாநிலமான பிகாரில் நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
இந்த வெற்றியை பலரும் பலவிதமாக பார்க்கிறார்கள். சிலர் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்கிறார்கள். சிலர் தாஜி-மதம் கடந்து முதல்வர் நிதிஷ்குமார் செயல்பட்டதால் கிடைத்த வெற்றி என்கிறார்கள்.
தேர்தல் பிரசாரத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரக்கூடாது என்று தடுத்ததால் அவருக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. அதாவது மதவெறிக்கு இடமில்லை என்பதை அந்த மாநில மக்கள் நிரூபித்துள்ளனர். மோடி அங்கு பிரசாரத்துக்குப் போயிருந்தால் நிச்சயம் இந்த வெற்றியே கிடைத்திருக்காது.
இந் நிலையில் அயோத்தி வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த நடக்கும் இந்தக் கூட்டத்தில் ஒருவித அமைதியைப் பார்க்கிறேன். அதாவது புயல் வருவதற்கு முன் இருக்கும் அமைதிபோல இது இருக்கிறது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் அங்குதான் பிறந்தார் என்று சொல்லி 1528ம் ஆண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்தார்கள். நம்ப முடியாத பழைய வரலாறுகளை சொல்லிக் கொண்டிருக்காமல் இருப்பதைப் பாதுகாப்பது தான் தேசிய ஒருமைப்பாடு. 48 ராமாயணம் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான கதை சொல்லப்பட்டுள்ளது.
சில வரலாற்று ஆய்வாளர்கள் ராமாயணத்துக்கும் அயோத்திக்கும் தொடர்பில்லை என்கிறார்கள். உண்மையைத் தேட வேண்டுமானால் எதையும் அறிவுப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும். வரலாறு, அறிவியல், தொல்லியல் ஆய்வு ஆகிய எதையும் கணக்கில் கொள்ளால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முஸ்லீம்கள், கிருஸ்துவர்கள், பெளத்த மதத்தினர், சமணர்கள், தலித்துகள், பழங்குடியினர் 45 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவின் பூர்வகுடிகள். அவர்களின் மத நம்பிக்கையை புறக்கணித்துவிட்டு நாட்டை முன்னேற்றிவிட யாராலும் முடியாது.
நாட்டைவிட மதம் பெரிது என்று நினைத்தால் இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications