தூத்துக்குடி: கனமழைக்கு 102 வீடுகள் சேதம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 102 வீடுகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில்தொடர்ந்து 3 வாரங்களாக பருவ மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் அதிக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 69 வீடுகள் மழைக்கு சேதமடைந்தன. தொடர்ந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி தூத்துக்குடி கீழரத வீதியில் ஒரு வீடும், ஓட்டப்பிடாரத்தில் 17 வீடுகளும், விளாத்திகுளத்தில் 7 வீடுகளும் மொத்தம் 33 வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழைக்கு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 102 வீடுகள் சேதமடைந்துள்ளன.
நேற்று முன்தினம் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் 320 படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையே இன்னும் 2 நாட்கள் மழையும், காற்றும் அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நேற்றும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி நகரில் விடிய விடிய பெய்த மழையால் தூத்துக்குடி திருவிக நகர், இந்திரா நகர், எஸ்எஸ் காலனி, கந்தன் காலனி, அமுதா நகர், ஆகிய பகுதிகளில் மழை நீர் புகுந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில பகுதிகளில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications