வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய விரும்பும் தமிழகம்: ஸ்டாலின் பெருமிதம்
ஸ்ரீபெரும்புதூர்: தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தைத் தேர்ந்தெடுக்கின்றன என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சாம்சங் செல்போன் கம்பெனி ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழிற் பூங்காவில் உள்ளது. இங்கு ரூ. 350 கோடி செலவில் குளிர் சாதனப் பெட்டிகள் தயாரிக்கும் கம்பெனி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு நிறுவனத்தைத் தொடங்கி வைத்த ஸ்டாலின் பேசுகையில்,
இந்த நிறுவனத்தைத் திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நான் கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அங்குள்ள பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டின.
தமிழக அரசின் சிறந்த தொழில் கொள்கையால் தான் இங்கு நோக்கியா, சாம்சங், மோட்டரோலா, வீடியோகான் போன்ற பெரிய நிறுவனங்கள் தொழில் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் சுகாதாரம், கடின உழைப்பாளிகள், துறைமுக வசதி, அடிப்படை கட்டமைப்பு, கல்வி, முதலீடு சூழல் முதலியை சிறப்பாக இருப்பதால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தேர்வு செய்கின்றன.
இந்தியா அளவில் தொழில் துவங்க சிறப்பான வசதிகள் உள்ள மாநிலங்கள் இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு ஆகும். மற்ற இரு மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழ் நாடு தான் பெரிய மாநிலம். ஆகவே முதலீட்டாளர்களுக்கு விருப்பமான மாநிலங்களி்ல் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மின் அணு சாதனங்களைத் தயாரிக்கும் சாம்சங் மரபு சாரா எரிசக்தி திட்டத்திலும் பங்கு பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசு முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பெயரில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்யவிருக்கிறது. இதன் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படவிருக்கிறது. எனவே இந்த தொழிற்சாலை வளாகத்தில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் சோலார் பேனல் உபகரணங்களும், நவீன தொலைக்காட்சி பெட்டிகளும் தயாரிக்க முன் வர வேண்டும் என்று அவர் பேசினார்.
இந்த விழாவையடுத்து சந்தவேலூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் கலைஞர் வீடு கட்டும் திட்டப்பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்படவுள்ள வீடுகளுக்கு அடிக்கல் நாட்டினார்.












Click it and Unblock the Notifications