போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல்-திமுகவின் தொமுச வெற்றி: அதிமுக-தேமுதிக கூட்டணி படுதோல்வி
சென்னை: தமிழக போக்குவரத்துக் கழக தொழிற்சங்க பிரதிநிதியைத் தேர்வு செய்ய நடந்த தேர்தலில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
தொழிலாளர்களின் போனஸ் உள்ளிட்டவை குறித்து நிர்வாகத்துடன் பேசுவதற்கான பிரதிநிதியை தேர்வு செய்ய தேர்தல் நடத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 25ம் தேதி தேர்தல் நடந்தது.
இதில் பதிவான வாக்குகள் குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனையில் எண்ணப்பட்டு வந்தது. நேற்று முடிவு அறிவிக்கப்பட்டது.
இதில் தொமுச எனப்படும் திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 73,450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
2வது இடத்தை சிஐடியூ தொழிற்சங்கம் பெற்றது. அந்த அமைப்புக்கு 19,002 வாக்குகள் கிடைத்ன.
அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவைக்கு 15,765 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய்காந்தின் தேமுதிக ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அதற்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன.
மேலும் அதிமுகவுக்கு மதிமுகவும் ஆதரவு தெரிவித்திருந்தது.
ஆனாலும் இக் கூட்டணி திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சிகளுக்கு அடுத்து 3 இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.
அதே போல காங்கிரசிஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசி, பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஐடியுசி ஆகிய தொழிற்சங்கங்ளும் இத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளன.
12 ஆண்டுகளுக்குப் பின் இத் தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.