போக்குவரத்து தொழிலாளர் சங்க தேர்தலில் பெற்ற வெற்றி சட்டசபைத் தேர்தலுக்கு வெள்ளோட்டம்-கருணாநிதி

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:
கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதிலும் ஏதோ பொதுத்தேர்தல் நடைபெறுவதைப்போல மிகுந்த பரபரப்பு காட்டப்பட்ட பேருந்துத் தொழிலாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதியஉயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கான சங்கத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்தான் கடந்த 25ந்தேதி தமிழகமெங்கும் நடைபெற்றது. தி.மு.க. தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், அ.தி.மு.க. தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கப் பேரவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏ.ஐ.டி.யு.சி.), காங்கிரஸ் கட்சியின் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (ஐ.என்.டி.யு.சி), தே.மு.தி.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் ஆதரவுபெற்ற சங்கங்கள் என மொத்தம் 13 தொழிற்சங்கங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.
அதிலும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு தே.மு.தி.க. ஆதரவளித்த சங்கம், வாக்குகள் சிதறாமல் இருக்கவும், தி.மு.க. ஆதரவான தொ.மு.ச.வைத் தோற்கடிக்க வேண்டுமென்பதற்காகவும் அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆதரவானவர்கள் அனைவரும் இணைந்து தோழமை அமைத்து கூட்டணியாக போட்டியிடப்போவதாக அறிவித்து - அது 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான முன்னணி என்பதைப் போல நமது தமிழக ஏடுகள் சில, அதற்கு பெரும் முக்கியத்துவம் தந்து, அந்தக் கட்சியின் தலைவர்களின் மிகப்பெரிய கட்-அவுட்' புகைப்படங்களையெல்லாம் வெளியிட்டு விளம்பரம் செய்தார்கள்.
அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவோ கொடநாட்டில் இருந்தவாறே பஸ் தொழிலாளர்கள் சங்கத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான சங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்று பத்திரிகைகள் வாயிலாக அறிக்கைகளை வெளியிட்டார்.
தமிழகம் முழுவதும் பணியாற்றும் மொத்தம் 1,33,580 ஊழியர்களில், 1,28,377 பேர் அதாவது 96 சதவிகிதத்தினர் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். ஓட்டு எண்ணிக்கை 27ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி, 28ம் தேதி பகல் 12 மணி வரை - நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் ஹாதி முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்றாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. தான் முன்னணியில் இருந்து வெற்றிபெற்றது. தே.மு.தி.க., ம.தி.மு.க. உட்பட்ட 8 சங்கங்களின் ஆதரவுடன் போட்டியிட்ட அ.தி.மு.க. தொழிற்சங்கம் 2வது இடத்திற்குக்கூட வரமுடியாமல், 3வது இடத்திற்கு வந்துள்ளது.
தொ.மு.ச. 73,450 வாக்குகளை அதாவது 57.31 சதவிகித வாக்குகளைப் பெற்று முதல் இடத்திலும், - சி.ஐ.டி.யு. 19,002 வாக்குகளைப் பெற்று 2வது இடத்திலும், - அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., ஆதரவு பெற்ற சங்கங்கள் 15,765 வாக்குகளைப் பெற்று 3வது இடத்திலும், - ஐ.என்.டி.யு.சி. 4,824 வாக்குகளைப் பெற்று 4வது இடத்திலும் - பா.ம.க. தொழிற்சங்கம் 2,857 வாக்குகளைப் பெற்று 6வது இடத்திலும் - விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்கம் 2,307 வாக்குகளைப் பெற்று 7வது இடத்திலும், ஏ.ஐ.டி.யு.சி. 1,912 வாக்குகளையும் பெற்றுள்ளன.
தொ.மு.ச. வெற்றிபெற்று முதல் இடத்திற்குவர வாக்களித்த அத்தனை தொழிலாளர்களுக்கும் என்னுடைய நன்றியையும், அந்த வெற்றிக்காக உழைத்த அந்தச் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் தொ.மு.ச.விற்கு வாக்களிக்காமல், வேறு சங்கங்களுக்கு வாக்களித்தவர்கள் மீது எனக்கு வருத்தமில்லை. அவர்கள் தங்கள், தங்கள் கட்சியின் கட்டுப்பாடு கருதி அவர்களுடைய சங்கங்களுக்கு வாக்களித்திருக்கலாமே தவிர, கழக அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு உதவிகளை செய்யவில்லை, சலுகைகளை அளிக்கவில்லை என்று ஒருபோதும் மனதார எண்ணியிருக்க மாட்டார்கள் என்பதை நான் நன்கறிவேன்.
அதனால்தான் நான் வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போதுகூட, "கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய சங்கம் வெற்றிபெற முடியாமல், தி.மு.க. சார்புடைய சங்கம் பெருவெற்றியைப் பெற்று வருகிறது என்ற செய்தியைக் கேட்டபோது அதற்காக நான் மகிழ்ச்சி அடையவில்லை. "அய்யோ, இடதுசாரி இயக்கத்தினுடைய தோழர்கள், அந்த அமைப்பின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெறாமல் போய்விட்டார்களே'' என்ற சங்கடம்தான் எனக்கு'' என்று குறிப்பிட்டேன்.
அ.தி.மு.க.வின் மீது ஆழ்ந்த பற்றும் பாசமும் கொண்ட போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஒருவர் - இந்தத் துறையின் அமைச்சர் நேருவைப் பார்த்தபோது, "அண்ணே, நான் அ.தி.மு.க. தான், ஆனாலும் தொ.மு.ச.விற்குத்தான் வாக்களிப்பேன், காரணம் கலைஞர் ஆட்சிக்கு வந்தாதான், தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே ஊதியஉயர்வு, ஊக்கத்தொகை என்றெல்லாம் கொடுப்பார்'' என்று சொன்னபோது, நேரு அவரிடம் உன்தோள் மீது அ.தி.மு.க. அடையாளமிட்ட சிறு துண்டை அணிந்திருக்கிறாயே என்று கேட்க, அதற்கு அவர் அது எப்போதும் என்தோள் மீது தான் இருக்கும், அதை எடுக்க மாட்டேன், இருந்தாலும் இந்தத் தேர்தலில் என் வாக்கு தொ.மு.ச.விற்குத் தான் என்று கூறினாராம்.
அந்த அளவிற்கு நம்முடைய அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன என்பதை அறிந்து எனக்கு நானே மகிழ்ந்து கொண்டே அந்தத் தொழிலாளர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்று ஒருக்கணம் நினைத்துப் பார்த்தேன்.
அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2001ம் ஆண்டு முதல் 2004-2005ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் 20 சதவிகித போனஸ் வேண்டுமென்று எவ்வளவோ வலியுறுத்திக் கேட்டபோதும், 8.33 சதவிகித அளவிற்குத்தான் போனஸ் கொடுத்தார். ஆனால் அந்தத்தொழிலாளர்களை ஏமாற்றுவதைப் போல தேர்தல் ஆண்டான 2005-2006ம் ஆண்டில் மட்டும் 20 சதவிகிதம் போனஸ் என்று அறிவித்து ரூ.63.15 கோடி போனசாகக் கொடுத்தார். ஆனால் தி.மு.க. 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் ஒவ்வொரு ஆண்டும் 20 சதவிகிதம் போனஸ் என்ற அளவிற்கு
2006-2007ல் ரூ.86.26 கோடியும், 2007-2008ம் ஆண்டில் ரூ.87.32 கோடியும், 2008-2009ல் ரூ.88.27 கோடியும், 2009-2010ல் ரூ.88.27 கோடியும், 2010-2011ல் ரூ.99.54 கோடியும் போனஸ் மற்றும் கருணைத் தொகை என்ற பெயரால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
சம்பள உச்சவரம்பு அதிகப்பட்சம் ரூ.3,500 என்பதை ரூ.10,000 ஆக உயர்த்தியும் - தகுதி தொகையை ரூ.2,500லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தியும் வழங்கப்பட்டது. இதன் பலனாக 2005-2006ல் ஒரு பணியாளர் பெற்ற அதிகப்பட்சத்தொகை ரூ.6,000 என்பது 2006-2007 முதல் ரூ.8,400 என்ற அளவிற்குப் பெற்று வருகிறார் என்கிறபோது - போக்குவரத்துத் தொழிலாளர்கள், தொ.மு.ச.வை வெற்றி பெற வைத்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
ஐந்தாண்டுகள் என மாற்றப்பட்ட ஊதிய ஒப்பந்தக் காலத்தை 3 ஆண்டுகள் என மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது.
2003ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களோடு ஊதிய ஒப்பந்தம் போட்டபோது, ஊதிய ஒப்பந்தத்தில் - அடிப்படை சம்பளத்தில் 9 சதவிகிதம் என்றும், குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.600 என்றும் இருந்தது. தி.மு.க. ஆட்சியில் 2007ம் ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளத்தில் 12 சதவிகித ஊதியஉயர்வு என்றும் குறைந்தபட்ச ஊதியஉயர்வு ரூ.1000 என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் இந்த ஊதிய ஒப்பந்தத்தில் விலைவாசிப்படி அடிப்படை சம்பளத்தில் சதவிகித முறையில் கணக்கிட ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும் ஆண்டு ஊதியஉயர்வுத் தொகை ஒன்றரை மடங்காக உயர்த்தப்பட்டது. ஊதிய ஒப்பந்தத்தால் ஆண்டிற்கு கூடுதல் செலவு ரூ.200 கோடி என்பதிலிருந்தே இந்த அரசுக்கு தொழிலாளர்கள்பால் உள்ள அக்கறையைப் புரிந்துகொள்ள முடியும்.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற 6278 தொழிலாளர்களுக்கு 31-7-2009 வரை நிலுவையில் இருந்து வழங்கப்பட ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை சுமார் ரூ.115 கோடி அரசால் வழிவகை முன்பணமாக வழங்கப்பட்டது. இந்தத்தொகை மேற்கண்ட தொழிலாளர்கள் தம்குடும்பத்துடன் சென்னைக்கு போக்குவரத்துக்கழகங்களின் ஏற்பாட்டின் மூலமாக அழைத்து வரப்பட்டு காசோலை மூலமாக நேரடியாக வழங்கப்பட்டது. மேலும் ரூ.10 கோடி அரசால் வழிவகை முன்பணமாக வழங்கப்பட்டு அது ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 31-3-2009 வரை நிலுவையில் இருந்த விடுப்பு ஒப்படைப்புத்தொகை வழங்கப்பட்டது.
முதல் முறையாக 17800 பதலி பணியாளர்களுக்கும் 2008-2009ம் ஆண்டுக்குரிய போனஸ் வழங்கப்பட்டது. 2009-2010ம் ஆண்டிற்கும் வழங்கப்படுகிறது.
ஓட்டுநர்களுக்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்பதை 8ம் வகுப்பு தேர்ச்சி என குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையிருப்பின் நிர்ணயிக்கப்பட்ட உயரம் 160 செ.மீ. என்பதிலிருந்து அரை செ.மீ. குறைத்துக் கொள்ளலாம்.
2006 முதல் 2010 வரை, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக 12,279 பேரும், கருணை அடிப்படையில் 1183 பேரும், பதலிப் பணியாளர்களாக 31,313 பேரும் புதிதாக பணியிலே அமர்த்தப் பட்டுள்ளார்கள். பணியாளர்களின் பதவி உயர்வு என்று எடுத்துக் கொண்டால்,
அ.தி.மு.க. ஆட்சியில் 2005-2006ல் பதவி உயர்வு பெற்றவர்கள் 171 பேர்கள் மட்டுமே; ஆனால் தி.மு.க. ஆட்சியில் 2006ல் 744 பேர்களும், 2007ல் 1805 பேர்களும், 2008ல் 1119 பேர்களும், 2009ல் 856 பேர்களும் பணியாளர்கள் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வும் ஆட்சியில் இருந்த கட்சி தானே, ஜெயலலிதாவும் முதல் அமைச்சராக இருந்தவர்தானே, அவர் வேண்டுகோள் விடுத்தும் அ.தி.மு.க. சங்கத்திற்கு தொழிலாளர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்ற கேள்வி எழலாம். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் சலுகைகள் பறிக்கப்பட்டன. அதற்கு உதாரணம் வேண்டுமா?
- போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தக்காலம் 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டாக உயர்வு.
- புதிய பணியாளர்கள் நியமனத்திற்குத் தடை.
- போக்குவரத்துக் கழகத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு நிறுத்தம்.
- போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு நிறுத்தம்.
- போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையான போனஸ் மற்றும் ஊக்கத் தொகை 20 சதவிகிதம் தரப்படாததால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 17 நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தொழிலாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சி யாக அவர்களுக்குரிய வருடாந்திர ஊதியஉயர்வு, மறுகட்ட ஆய்வின் மூலம் ஊதியஉயர்வு ஆகிய வைகள் மறுக்கப்பட்டன.
- ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகை பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையின்போது ஆண்டுதோறும் அளித்துவரப்பட்ட செயல்திறன் ஊக்கத்தொகை, நிறுத்தி வைக்கப்பட்டது.
- கல்வி உதவித்தொகை, தொழிலாளர்களின் அதிகப்பட்ச இரண்டு குழந்தைகளுக்குரிய தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
போக்குவரத்துத் துறையிலே பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அலுவலர்களுக்கு தி.மு.க. ஆட்சியிலே செய்யப்பட்ட நன்மைகளும், அ.தி.மு.க. ஆட்சியிலே செய்யப்பட்ட தீமைகளும்தான் போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தேர்தலில் நாம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு முக்கியமான காரணம்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, கழக அரசு இதுபோலவே சமுதாயத்திலே உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படக்கூடிய தேவைகளை உணர்ந்து அவைகளை நிறைவேற்றும் பணியிலே தன்னை முன்னிறுத்திக் கொண்டு பணியாற்றுகின்றது. எந்த ஒரு முற்போக்குப் பணிக்கும் வெள்ளோட்டம் விடுவது என்பது எப்போதும் பழக்கமான ஒன்று! அந்த வகையில் 2011ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வெள்ளோட்டமே தற்போது நடைபெற்று முடிந்துள்ள போக்குவரத்துத் தொழிலாளர்கள் தேர்தலில் கழகம் பெற்றுள்ள வெற்றி! இந்த வெற்றி மேலும் மேலும் தொடர - உன் பணிகள் தொடரட்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications