நெல்லை காங். தலைவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்: ஒருவர் விடுதலை
நெல்லை: காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் காவல்கிணறைச் சேர்ந்தவர் சேவியர் ஆம்ஸ்ட்ராங். வள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவரான இவருக்கும், அதே ஊர் அந்தோணியர் கோவில் தெருவைச் சேர்ந்த அந்தோணி எடிசனுக்கும் கடந்த 2003-ம் ஆண்டு அப்பகுதியில் நடந்த சர்ச் திருவிழாவில் மோதல் ஏற்பட்டது.
இதனால் இருவருக்கும் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி காவல்கிணறு சந்திப்பு காமராஜர் சிலை அருகே சேவியர் ஆம்ஸ்ட்ராங் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அந்தோணி எடிசன் காவல்கிணறு தங்கசாலை தெருவைச் சேர்ந்த கிங்ஸ்டன், அந்தோணி, திலிபன் ராஜ் ஆகியோர் சேவியர் ஆம்ஸ்டாரங்கிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
இது குறித்த பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி எடிசன் உள்பட 4 பேரையும் கைது செய்து நெல்லை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடந்து வந்த நிலையில் அந்தோணி இறந்து விட்டார்.
இதையடுத்து மீதமுள்ள 3 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது. வழக்கை நீதிபதி பொன் பிரகாஷ் விசாரித்து அந்தோணி, எடிசன், கிங்ஸ்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். திலிபன் ராஜ் விடுதலை செய்யப்பட்டார்.