ஜெ. சொத்து குவிப்பு வழக்கு:15, 16ல் 10 சாட்சிகளிடம் விசாரணை
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்தை மீறி கோடிக்கணக்கில் சொத்து குவித்த வழக்கை தமிழக அரசு தொடர்ந்தது. இந்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. அந்த மொழிபெயர்ப்பில் பிழைகள் அதிகமாக இருப்பதாகவும், எனவே அவற்றை ரத்து செய்துவிட்டு மீண்டும் நீதிமன்ற மேற்பார்வையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என்றும் கோரி ஜெயலலிதா சார்பில் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மொழிபெயர்ப்பில் உள்ள பிழைகளை மட்டும் திருத்திக்கொள்ள அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது. அதே நேரத்தில் மீண்டும் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் (இழுத்தடிப்பு) கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
இந் நிலையில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு நேற்று தனி நீதிமன்றத்தி நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் வழக்கறிஞர் சந்தீப், ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராயினர்.
அப்போது வாதிட்ட அரசு வழக்கறிஞர், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி சாட்சிகள் மறுவிசாரணையை தாமதமின்றி உடனடியாகத் தொடங்குமாறு கோரினார்.
ஆனால், மொழிபெயர்ப்பில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து அவற்றை சரிசெய்ய போதுமான கால அவகாசத்தை கேட்டு பெற்றுக் கொள்ள தனக்கு உயர் நீதிமன்றம் உரிமை வழங்கி இருப்பதாகவும், எனவே போதுமான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா வரும் 15 மற்றும் 16 ஆகிய 2 நாட்கள் சாட்சிகள் மறுவிசாரணை நடத்தப்படும் என்றும், அந்த 2 நாட்களில் 10 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.