மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் ரூ.1000 கோடியில் சீரமைக்கப்படும்-ஸ்டாலின்
நாகர்கோவில்: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் ரூ.1000 கோடி செலவில் விரைவில் சீரமைக்கப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் வந்தார்.
நேற்று காலை அகஸ்தீவரம் ஊராட்சி ஒன்றியம் கரும்பாட்டூரில் கலைஞர் வீடு வழங்கும் திட்டதின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை ஆய்வு செய்தார். அப்போது ஜெகன், மணிகண்ட ராஜன், பானுமதி ஆகியோரது வீடுகளை திறந்து வைத்து சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 21 லட்சம் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3 லட்சம் வீடுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்.
இதுவரை 3 ஆயிரம் வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 2011-ம் ஆண்டில் ஆயிரத்து 539 வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 580 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதர 959 வீடுகளின் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்.
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என்றார் ஸ்டாலின்.