ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு என மனம்போனபடி குறிப்பிட்டுள்ளார் சிஏஜி - ஆ ராசா
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது ஆ.ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.ஆர்.அந்தியர்ஜுனா கூறியதாவது:
மனதில் தோன்றிய ஒரு தொகையை சி.ஏ.ஜி. குறிப்பிட்டுள்ளது. அதன்படி பிரமிக்கத்தக்க ஒரு தொகையை (ரூ.1.76 லட்சம் கோடி) வருவாய் இழப்பாக சி.ஏ.ஜி. குறிப்பிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும்.
சி.ஏ.ஜி.யின் அறிக்கையை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றார்.
இந்த நிலையில் குறுக்கிட்ட நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர், "இந்த விஷயம் பொதுக் கணக்கு குழுவின் ஆய்வில் உள்ளது. இந்த நீதிமன்றம் என்ன முடிவெடுக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?' என கேட்டனர்.
இதற்கு அந்தியர்ஜுனா பதிலளிக்கையில், "எந்த அடிப்படையில் சி.ஏ.ஜி. மதிப்பிட்டுள்ளதோ, அது மதிப்பீடு செய்வதற்கான தரமான முறையல்ல. 2003 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து சி.ஏ.ஜி. விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால், ஆ.ராசா 2007 மே 16-ல்தான் அமைச்சராகியுள்ளார்.
ராசா அமைச்சராவதற்கு முன்பே, அவருக்கு முன் அமைச்சர்களாயிருந்த தயாநிதி மாறன், அருண் சௌரி ஆகியோர் 52 நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கிவிட்டனர்.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தொலைத்தொடர்புத் துறை செயல்பட்டுள்ளது. டிராய் அமைப்பின் பரிந்துரைகளை ரத்து செய்யும் அதிகாரம் சி.ஏ.ஜி.க்கு கிடையாது.
டிராய் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே செயல்பட்டுள்ளபோதும், இந்த முறைகேடுகளுக்கு முழு பொறுப்பே ஆ.ராசாதான் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் சி.ஏ.ஜி.யின் அறிக்கை உள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "சி.ஏ.ஜி. போன்ற உயர்ந்த தணிக்கைக் குழு, அரசு சரி என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை' என்றனர்.
"தணிக்கை என்பது ஒழுங்கு நடவடிக்கை அல்ல. சில குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து சி.ஏ.ஜி. எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது' என்று நீதிபதிகள் மேலும் குறிப்பிட்டனர்.
மவுனமாக இருந்தால் குற்றவாளியா...
பின்னர் அந்தியர்ஜுனா கூறுகையில், "ஆ.ராசா மவுனமாக இருப்பதால், தான் குற்றவாளி என்று ஒப்புக் கொண்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த விஷயம் நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், ஒரே ஒரு செய்தியாளரிடம் பேச அவர் ஒப்புக் கொண்டார்.
ஆனால், அதற்கு முன்னரே ராசாதான் குற்றவாளி என ஊடகங்கள் தீர்ப்பளித்துவிட்டன. ராசாதான் ரூ.1.76 லட்சம் கோடி இழப்புக்கு காரணம் என்ற தோற்றத்தை உண்டாக்கிவிட்டன.
அரசியலமைப்புச் சட்டப்படியான பொறுப்பு, அரசியல் நிர்பந்தம், தனது கட்சித் தலைமையின் அறிவுறுத்தல் காரணமாகவே ராசா தனது பதவியை நவம்பர் 14-ல் ராஜிநாமா செய்தார்.
இந்த பிரச்னை தொடர்பாக கடந்த 16 நாள்களாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதற்கு முன் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுபோல்
நிகழ்ந்ததில்லை.
குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் தனது தரப்பு வாதத்தை எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஆனால், பிரச்னை நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே, தினம் ஒரு பரபரப்புச் செய்தியை ஊடகங்கள் வெளியிடுகின்றன," என்றார்.
அப்போது, "சி.ஏ.ஜி. அறிக்கை ரகசியமாக காக்கப்பட வேண்டும் என விதி எதுவும் உள்ளதா?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ராசா விரக்தி...
ஒரு கட்டத்தில், எல்லா அமைப்புகளும் தோல்வியுற்ற நிலையில், தான் அமைதிக்கு எதிரானவனாகக் கருதப்படுவதாக ராசா விரக்தியடைந்துள்ளதாக அந்தியர்ஜுனா குறிப்பிட்டார்.
ஆனால், ராசா அப்படி கருதத் தேவையில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.