டிச. 7ல் கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் : மழை நிலவரம் குறித்து ஆய்வு
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடக்கிறது. இதில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதுவரை மழைக்கு 120 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில் உயர் அதிகாரிகள் குழுவை மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பார்வையிடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சரவையின் அவசரக் கூட்டம் வரும் 7-ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது. இதில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும்.
இது குறித்து அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
முதன்மை செயலாளர்கள் வி. கே. சுப்புராஜ் (சுகாதாரம்), பி. டபுள்யூ. சி. தாவிதர் (மின்சாரம்) அடங்கிய அதிகாரிகள் குழு மழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களை வரும் 5, 6 ஆகிய தேதிகளில் பார்வையிடுகின்றனர்.
அவர்கள் பயிர்கள், சாலைகள், மற்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்கின்றனர். மேலும், அம்மாவட்டங்களில் நடந்து வரும் நிவாரணப் பணிகளையும் மேற்பார்வையிடுகின்றனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.