டிரக் ஓட்டுநரிடம் வழிப்பறி செய்ய முயன்ற 4 சிறைக் காவலர்கள் கைது
பனாஜி: கோவாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் டிரக் ஓட்டுநரை வழிமறித்து கொள்ளையடிக்க முயன்ற 4 சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சி. எல். பாட்டீல் கூறியதாவது.
நேற்றிரவு பனாஜி-பாண்டா நெடுஞ்சாலையில் டிரக் ஓட்டுநரை 4 சிறைக் காவலர்கள் வழிமறித்தனர். அவர்கள் பனாஜியில் இருந்து 30 கிமீ தொலைவில் இருக்கும் குந்தைம் கிரமாத்துக்கு அருகே வைத்து அந்த ஓட்டுநரை தாக்கினர். பின்னர் அவரிடம் இருப்பவற்றை கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் வேன் ஏதோ விபரீதம் நடக்கிறது என்று டிரக் அருகில் வந்துள்ளது. இதை பார்த்த அந்த 4 பேரும் அங்கிருந்து 2 பைக்குகளில் தப்பிக்க முயன்றனர். அவரக்ளை நெடுந்தூரம் விரட்டிப்பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் அன்குஷ் நாயக், விஷால் நாயக், கேஷவ் கவாஸ் மற்றும் தினேஷ் வாரங் என்று தெரிய வந்தது. அவர்கள் இருட்டில் தங்களை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க கருப்பு கால்சட்டையும், டி ஷர்டும் அணிந்திருந்தனர்.
டிரக் ஓட்டுநர் அவரிடம் இருந்த பணத்தையும், செல்போனையும் தரமறுத்ததையடுத்து அவர்கள் ஓட்டுநரைத் தாக்கியுள்ளனர் என்று டிரக் உரிமையாளர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.