ஆண் குழந்தை வேண்டி பதேபூர்சிக்ரியில் பிரார்த்தனை செய்த கர்லா
55 வயதாகும் சர்கோஸி, 43 வயதான மனைவி கர்லா ப்ரூனியுடன் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். சர்கோஸிக்கு தனது முந்தைய இரு கல்யாணங்கள் மூலம் 3 மகன்களும், கர்லாவுக்கு தனது முதல் கணவர் மூலம் ஒரு மகனும் உள்ளனர். இருப்பினும் சர்கோஸிக்கும், கர்லாவுக்கும் இதுவரை குழந்தை எதுவும் பிறக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள சர்கோஸியும், கர்லாவும் ஆண் குழந்தை பிறக்க வேண்டி பதேபூர் சிக்ரியில் உள்ள தர்காவில் பிரார்த்தனை செய்துள்ளனர்.
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலைப் பார்க்க வந்த இருவரும் அருகில் உள்ள பதேபூர்சிக்ரிக்கும் சென்றனர். அங்குள்ள தர்கா அக்பரால் 1570ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். மிகப் பழமையான இந்த தர்காவுக்கு ஒரு பின்னணிக் கதை உண்டு. நீண்ட காலமாக குழ்நதைப் பேறு இல்லாமல் வருத்தத்தில் இருந்து வந்த அக்பர், பதேபூர்சிக்ரியில் வாழ்ந்த மகான் சலீம் சிஸ்தியின் ஆசிர்வாதத்தைப் பெற்றார். இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து 3 மகன்கள் பிறந்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அக்பர், இந்த தர்காவை கட்டிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் இந்த தர்காவுக்கு வந்து வேண்டிக் கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இதையடுத்தே சர்கோஸியும், கர்லாவும் அங்கு விசிட் அடித்தனர்.
மலர் போர்வை போர்த்தி தர்காவில் தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று இருவரும் பிரார்த்தித்துக் கொண்டனர். கர்லா ப்ரூனி மந்திரித்த கயிற்றைக் கட்டிக் கொண்டார்.
பிரார்த்தனை குறித்து கர்லா கூறுகையில், எனக்கு ஏற்கனவே மகன் இருந்தாலும், இன்னொரு மகன் வேண்டும் என விரும்புகிறேன். அதையே இங்கு வேண்டிக் கொண்டேன் என்றார்.