சேலம் சிறையிலிருந்து ஜான்பாண்டியன் விடுதலை: உற்சாக வரவேற்பு
நெல்லை: கோவை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜான் பாண்டியன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விவேக் என்பவர் கடந்த 1993-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான் பாண்டியன் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணை நடந்து வரும்போது 2 பேர் இறந்து விட்டனர். ஜான்பாண்டியன் உள்பட 9 பேர் மீதான வழக்கை கோவை செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது. 2 பேரை விடுதலை செய்தது. ஜான் பாண்டியன் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து 7 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 7 பேர் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் திர்புர்கர், திரியோத் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து ஜான் பாண்டியன் உள்பட 5 பேரை விடுதலை செய்தது. குமார், பவுன்ராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜான் பாண்டியன் இன்று காலை 10.30 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு, கட்சி நிர்வாகிகள் சிறை வாசலில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட ஜான் பாண்டியன் நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நெல்லை வருகிறார். வழிநெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று இரவு நெல்லை வரும் ஜான் பாண்டியனுக்கு தடபுடலான வரவேற்பு அளிக்கப்படவுள்ளதாம். மேலும், சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி ஜான்பாண்டியன் கிராமம், கிராமமாக சென்று கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை திரட்ட உள்ளாராம்.












Click it and Unblock the Notifications