அனைத்து டெபாஸிட்டுகளின் வட்டியையும் 150 புள்ளிகள் உயர்த்திய எஸ்பிஐ!!
மக்களுக்கு அவர்களின் வைப்புத் தொகைகளின் மீது நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வட்டி வீத உயர்வை அறிவித்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
நாளை முதல் இந்த புதிய வட்டி விகிதம் நடைமுறைக்கு வருகிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் டி சுப்பாராவ் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், வங்கிகள் அதிக டெபாஸிட்டுகளை ஈர்க்கவும், மக்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையிலும், வட்டி வீதங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி, சின்டிகேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆப் இந்தியா போன்றவை வைப்புத் தொகைகளுக்கான வட்டிகளை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டன.
இதனைத் தொடர்ந்தே பாரத ஸ்டேட் வங்கியும் வட்டி உயர்வை அறிவித்துள்ளது.
இதன் மூலம் நீண்ட கால வைப்புத் தொகைகளுக்கு 8.75 சதவீதம் வரை அதிகபட்சமாக வட்டி ஈட்ட முடியும்.
46 முதல் 90 நாட்களுக்குள்ளான குறுகிய கால டெபாஸிட்டுகளுக்கு இப்போது 4 சதவீத வட்டி தரப்படுகிறது. இது 5.5 சதவீதமாக உயர்கிறது.
181 நாளிலிருந்து 1 ஆண்டுக்குள்ளான குறுகிய கால கடன்களுக்கு தற்போது வழங்கப்படும் 6 சதவீத வட்டி உயர்த்தப்பட்டு, 7.25 சதவீதமாக வழங்கப்படும்.