தமிழகத்திற்கு ரூ. 2000 கோடி மழை நிவாரணம் கோரி நாளை திருமா. ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ. 2000 கோடி ஒதுக்கக் கோரி நாளை சென்னையில் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மழை வெள்ளத்தால் தமிழ்நாடு கடுமையான பாதிப்புக்குள்ளான சூழலில் இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு நிவாரண நிதியாக முதல்கட்டமாக ரூ.2,000 கோடியை உடனே வழங்க வேண்டும்.
மேலும் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்கு மத்திய மந்திரி தலைமையில் குழு ஒன்றை அனுப்பிவைக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை சென்னையிலும், 8-ந் தேதி அன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அனைத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் நடைபெறம் ஆர்ப்பாட்டம் கட்சி தலைவர் என்ற முறையில் எனது தலைமையிலும், மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்களின் தலைமையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.