துரித கதியில் வெள்ள நிவாரணப் பணிகள்! - முக ஸ்டாலின்
நெய்வேலி: தமிழகம் முழுவதும் மழை வெள்ள நிவாரணப் பணிகள் துரித கதியில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மருவாயில், தேசிய நெடுஞ்சாலை உடைப்பையும், விளை நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும் பார்வையிட்ட பிறகு நிருபர்களுக்கு அவர் அளித்தப் பேட்டி:
தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை குறித்து, மாவட்ட அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்கள் மூலம் பாதிப்பு சேத விவரங்களை அறிந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையையும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதில் அதிகம் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களை தேர்வு செய்து, அதன் சேத விவரங்களை சேகரித்து 7-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கன மழைக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். 120 கால்நடைகள் இறந்துள்ளன. ஊரக, நகர்புறம், பேரூராட்சி, தேசிய நெடுஞ்சாலை என சுமார் 1000 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. 90 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இதுவரை 8 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2 ஆயிரம் வீடுகள் முற்றிலுமாகவும், 12 ஆயிரம் வீடுகள் சாதாரண நிலையில் பாதிப்படைத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்...", என்றார்.
பின்னர் குறிஞ்சிப்பாடிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், அப்பகுதியில் மழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான 279 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ரூ 20 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
அவருடன் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பெ சீத்தாராமனும் சென்றனர்.












Click it and Unblock the Notifications