ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி
மதுரை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டத்தை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி அளித்துள்ளது.
திருநெல்வேலியில் வாக்காளர் விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் 2ஜி ஸ்பெக்ட்ரமில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் தா.பாண்டியன், மதிமுக சார்பில் நாஞ்சில் சம்பத், அதிமுக சார்பில் பழ.கருப்பையா, ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணிய சாமி ஆகியோர் பங்கேற்று ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் என்ன நடந்தது என்பது பற்றி விளக்குவதாக இருந்தார்கள்.
இந்த கூட்டத்திற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டபோது, சட்டம் ஒழுங்கு பிரச்சனையால், இதற்கான அனுமதியை தர இயலாது என்று காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இதையடுத்து வாக்காளர் விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையில் பொதுக்கூட்ட திடலின் உரிமையாளர்கள், அங்கு கூட்டம் நடத்த தங்களுக்கு விருப்பம் இல்லை என்பதை எழுதிக்கொடுத்ததை காவல் துறை சமர்ப்பித்தது. இதையடுத்து விசாரணை நடந்தது.
இரு தரப்பு மனுவையும் விசாரித்த நீதிபதி தனபாலன், திருநெல்வேலி காந்தி திடல், ஜவஹர்லால் நேரு திடல் ஆகிய இரண்டு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த கோர்ட் உத்தரவிடுகிறது. வரும் 8ம் தேதி முதல் 16 ம் தேதி வரை இந்த இரு திடல்களிலும் பொதுக்கூட்டம் நடத்த இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications