பெரியாறு அணை உடைவது போன்ற கிராபிக்ஸ் சிடி: வெளியிட்ட அச்சுதானந்தன்
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்க கேரள அரசு மறுத்து வருகிறது. நீர்மட்டத்தை உயர்த்தினால் அணை உடைந்து இடுக்கி உட்பட பல்வேறு மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி வருகிறது.
மேலும் அணை உடைவது போலவும், ஏராளமான மக்கள் பலியாவது போலவும் கிராபிக்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட சிடியை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு கேரள மக்களிடையே பீதியை கிளப்பியது.
இந்த நிலையில் வாழ்க்கைக்கும், மரணத்துக்கும் இடையே அணை என்ற பெயரில் முல்லை பெரியாறு அணை உடைவது போன்ற சிடியை கேரளாவை சேர்ந்த விஜயன் ஜெயஸ்வனம் என்பவர் தயாரித்துள்ளார்.
45 நிமிடங்கள் ஓடும் இந்த சிடியில் அணை உடைந்தால் லட்சக்கணக்கான மக்கள் பலியாகும் ஆபத்து இருப்பதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன், நீர்பாசன துறை அமைச்சர் பிரேமசந்திரன், எதிர்கட்சி தலைவர் உம்மன்சாண்டி, முல்லை பெரியாறு கமி்ட்டி தலைவர் பரமேஸ்வரன் நாயர் ஆகியோர் ஆவேசமாக பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த சிடி வெளியீட்டு விழா திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. கேரள முதல்வர் அச்சுதானந்தன் இதை வெளியிட்டார்.
நடக்க சாத்தியமில்லாத ஒன்றை, நடக்கப் போவதாக கூறி, நடந்தால் என்னாகும் என்று கூறி மக்களை பீதிக்குள்ளாக்கி வரும் கேரள அரசு ரொம்பப் பொறுப்பான அரசாகவே தோன்றுகிறது.